"சாப்பிட்டுக் கொண்டிருந்த அப்பாவின் சட்டையை பிடித்து இழுத்து சென்றனர்" - விவரிக்கும் ஜெயக்குமார் மகன்

By : Mohan Raj
"சாப்பிட்டுக்கொண்டிருந்த அப்பாவை சட்டையை பிடித்து இழுத்து சென்றது தி..முக அரசு" என கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் தி.மு.க'வினர் கள்ள ஓட்டு பட முயன்றதாக அ.தி.மு.க'வினர் தி.மு.க'வை சேர்ந்த நரேஷ் என்கின்ற நபரை பிடித்து அடித்தனர், இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்குதலை தடுத்து நிறுத்தி அந்த நபரின் கைகளை பின்புறமாக கட்டி அழைத்து வந்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபரின் தனி உரிமையை மீறும் விதமாக ஜெயக்குமார் அத்து மீறி செயல்பட்டதாக காவல்துறையில் வழக்கு பதிவாகி கடந்த 21'ம் தேதி இரவு ஜெயக்குமார் தி.மு.க அரசால் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து அவரது மகன் ஜெயவர்தன் கூறும்போது, "கடந்த 21'ம் தேதி இரவு எட்டு மணிக்கு எல்லோரும் வீட்டில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம் திடீரென வீட்டுக்குள் புகுந்த போலீசார் அப்பாவை கைது செய்வதாக சொல்லி அவரது சட்டையைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்றனர். அப்பாவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு 'என்னையும் உடன் வர வைக்க அனுமதிக்க வேண்டும்' என்ற என் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். நீதிபதியின் முன் இரவு 12 மணிக்குதான் அப்பாவை ஆஜர்படுத்தினர், நான்குமணி நேரமாக அவரை எங்கே வைத்திருந்தனர் என்ற தகவலை கூட எங்களிடம் சொல்லவில்லை.
பின்னர் இதுகுறித்து நாங்கள் நீதிமன்றத்தில் முறையிட்டு பிறகுதான் அப்பாவிற்கு புழல் சிறையில் முதல் வகுப்பு சிறையில் வசதி செய்து கொடுத்தார்கள், தேர்தலின்போது ஒரு அநியாயம் நடக்கிறது என்றால் தவறு செய்யக் கூடிய நபரை காவல்துறை வசம் பொது மக்களை பிடித்து கொடுக்கலாம் என தேர்தல் ஆணையமே கூறுகிறது அதைத்தான் அப்பாவும் செய்தார். தி.மு.க தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி எடுத்து வருகின்ற இந்த பழிவாங்கும் நடவடிக்கைகள் இன்னும் வீரியமாக அ.தி.மு.க'வை எழுச்சி பெற வைக்கும் என்றார்.
