"உங்க மனைவிக்காக என்ன ஒரங்கட்டுவீர்களா?" செந்தில்பாலாஜி முன் கொதித்த தி.மு.க மகளிரணி நிர்வாகி
By : Mohan Raj
"எல்லோரும் மனுஷங்கதான் உங்க மனைவிக்காக என் வாய்ப்பை மறுப்பதா? என் வளர்ச்சியை தடுக்க நீங்கள் யார்" என தி.மு.க மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் விழா மேடையிலேயே செந்தில் பாலாஜி முன் காட்டமாக பேசியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க கோவை பகுதியில் பெரும் வெற்றி பெற்றது, முக்கியமாக கோவை மாவட்டத்தில் பல இடங்களை தி.மு.க கைப்பற்றியது. இந்நிலையில் ஒருங்கிணைந்த கோவை தி.மு.க செயற்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது, இதில் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டார் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கோவை மாநகராட்சி மேயர் கனவுடன் தீவிரமாக பணியாற்றி வந்த மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் கலந்து கொண்டார், ஆனால் தேர்தலில் போட்டியிட அவருக்கு இடம் கிடைக்கவில்லை எனவே அதன் காரணமாக விலகி இருந்தார் தற்போது தி.மு.க கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்பொழுது அவரை பேச அழைத்த பொழுது தன் மனதில் உள்ள குமுறலை எல்லாம் கொட்டி தீர்த்துவிட்டார் மீனா ஜெயக்குமார். கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது, "அமைச்சர் செந்தில்பாலாஜியை கோவை பொறுப்பாளராக நியமித்தவுடன் தலைவர் கோவைக்கு ஒரு நல்ல ஆம்பளையை அனுப்பி வைத்துள்ளார் என என் நண்பர்களிடம் கூறினேன், மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக்கும் எனக்கும் பெரிதாக பிரச்சனை இல்லை. ஒரு இடம் சம்மந்தமான தகறாரில் தொடங்கியது, மாவட்ட பொறுப்பாளர் கார்த்தி என் வெற்றியை தடுத்தார் சமூக வலைதளம் ஊடகங்கள் மூலம் என்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்பினர்" என்றார்.
மேலும் நேரம் செல்ல செல்ல வேகமாக பேசியவர் "எல்லோரும் மனிதர்கள் தான் உங்கள் மனைவிக்காக என் வாய்ப்பை தடுப்பதால் என் வளர்ச்சியை தடுக்க முடியாது நீங்கள்" என பேசினார். முக்கியமாக மாவட்ட பொறுப்பாளர் கார்த்தி மீது பகிரங்கமாக குற்றம் சாட்டி நிறைய பேசத் துவங்கினார் ஒரு கட்டத்தில் அவர் கார்த்திக்கை ஒருமையில் பேச கார்த்திக் ஆதரவாளர்களுக்கும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பை கண்டு அமைச்சர் செந்தில் பாலாஜி கடுப்பானார்.
பின்னர் பேசிய செந்தில்பாலாஜி, "கூட்டத்தில் இது எல்லாம் பேச வேண்டாம் உங்கள் பிரச்சினைகளை என்னிடம் மனுவாக கொடுங்கள்" என கூறினார் இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.