தி.மு.க பிரமுகர்கள் இடங்களில் வருமான வரித்துறை சோதனை - குவாரிகளால் பணம் குவித்தது காரணமா
By : Mohan Raj
ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு ஆகிய இடங்களில் தி.மு.க பிரமுகருடன் தொடர்பு உடையவர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
ராணிப்பேட்டை, ஆற்காடு பகுதியைச் சேர்ந்த தி.மு.க பிரமுகரும், தொழிலதிபருமான ஏ.வி.சாரதி'யின் வீடு, அலுவலகங்கள், கல்குவாரி உள்ளிட்ட இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் தொடர்ச்சியாக சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பைனான்சியர் சுரேஷ் லால்வாணி என்பவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. சுரேஷின் மகன் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கும் மற்ற விசாரணை நடத்தி வரும் நிறுவனங்களுக்கும் தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் வருமான வரித்துறையின் ரகசிய தகவலின் படி சென்னை ஆலந்தூரில் உள்ள தாது மணல் அலுவலகத்திற்கும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர் அதன் தொடர்ச்சியாக பள்ளிக்கரணை பகுதியில் வசிக்கும் கந்தசாமி என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதுதவிர செங்கல்பட்டு எருமையூர் பகுதியில் உள்ள கல்குவாரியில் சோதனை நடத்தப்படுகிறது, இந்த சோதனைக்கும் தி.மு.க பிரமுகர் ஏ.வி.சாரதி தரப்பு நடத்திவரும் கல்குவாரி சோதனைக்கும் தொடர்பு இருப்பதாக வருமான வரித்துறையினர் சார்பில் தகவல் கிடைத்துள்ளது. வருமானவரித்துறை சோதனையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.