"ஐயா ஆன்மீக பக்தி அதிகமாயிடுச்சு வேற வழியில்லை?" - திராவிடர் விடுதலை கழகத்திற்கு சேகர்பாபு பதில்
By : Mohan Raj
தி.மு.க அரசு இந்து சமய அறநிலையத் துறை மூலமாக சிவராத்திரி விழா கொண்டாடுவதற்கு திராவிடர் விடுதலை கழகம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் கூறுகையில், "அறநிலையத்துறையின் பணி என்பது கோவில்களை பராமரிப்பது, கும்பாபிஷேகம் நடத்துவது, கோவில் நிலங்களை மீட்டு எடுப்பது போன்றவைதான் இதை சிறப்பாக செய்து வருகிறார் சேகர்பாபு. ஆனால் மக்களை திரட்டி ஆன்மீகம் என்ற பெயரில் மதப் பிரச்சாரம் செய்வது அறநிலையத் துறையின் வேலை அல்ல திராவிட மாடலும் அல்ல" என்றார்.
மேலும், "மக்களிடம் சென்று கல்வி, மருத்துவத்தை வழங்குவது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வது தான் திராவிட மாடல் ஆனால் மக்களிடம் மத பிரச்சாரம் செய்வதுதான் திராவிட மாடல் என சேகர்பாபு போன்ற அமைச்சர்கள் செய்வது தற்போதைய தமிழக அரசு கட்டிக் காத்துவரும் அடிப்படைக் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆபத்தான செயலாகும். உண்மையைச் சொன்னால் சிலருக்கு கசக்கும் அதற்காக சொல்லாமல் இருக்க முடியாது காரணம் நல்லதைச் சொல்வது நம் கடமை.
தி.மு.க'வில் லட்சக்கணக்கான சிந்தனையாளர்கள் திராவிட இயக்கக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு இன்னமும் அமைச்சர்களாக, பொறுப்பாளர்களாக இருக்கின்றனர் என்பதை அமைச்சர் சேகர்பாபு முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எனவே இந்த விவகாரத்தில் முதல்வர் உடனடியாக தலையிட வேண்டும், ராமர் பிறந்ததாக கூறப்படும் உத்தரப்பிரதேசம் அயோத்தி ராமர் கோவிலை புனித நகரமாக இந்துத்துவ பா.ஜ.க அறிவிக்கிறது.
ஆனால் தமிழகத்தில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ வேலு மயிலாப்பூரை ஆன்மீக நகரமாக மாற்றுவோம் என்கிறார் அயோத்தியிலாவது ராம் பிறந்தார் எனக் கூறுகின்றனர். மயிலாப்பூரில் யார் பிறந்தது அதையே ஏன் ஆன்மீக நகராக மாற்ற வேண்டும்? மற்ற பகுதிகளைக் காட்டிலும் மயிலாப்பூருக்கு மட்டும் ஏன் முக்கியத்துவம் தரவேண்டும்? வண்ணாரப்பேட்டை, ராயபுரம் ஆன்மீக நகரமாக தெரியவில்லையா?
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, "ஆன்மீகத்தில் மக்களின் ஈடுபாடு அதிகரித்துள்ளது மக்களின் மனநிலையை அறிந்து செயல்படுவதால் ஒரு அரசின் கடமை இந்து சமய அறநிலையத்துறை அதன் கடமையை செய்கிறது அவ்வளவு தான் நாங்கள் யாருக்கும் போட்டியாக விழா நடத்தவில்லை நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்" என்றார்.