திருமண விழாவிலும் தேர்தலை பற்றி பேசிய முதல்வர் ஸ்டாலின்
By : Mohan Raj
"உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் சரி, பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி தி.மு.க இனி வரக்கூடிய எந்த தேர்தலாக இருந்தாலும் மிகப்பெரிய வெற்றி பெறும்" என திருமண வீட்டில் கூட தேர்தலை பற்றி பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
அமைச்சர் தங்கம் தென்னரசு சகோதரியும் தென்சென்னை பாராளுமன்ற தொகுதி எம்.பி'யுமான தமிழச்சி தங்கபாண்டியன், முன்னாள் ஐ.ஜி.சந்திரசேகர் ஆகியோரது மகள் டாக்டர்.நித்திலாவுக்கும், பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூர் டாக்டர் ஆர்.மகேந்திரன் மகன் டாக்டர் கீர்த்தன் மகேந்திரனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களது திருமணம் இன்று காலை திருவான்மியூரில் நடந்தது திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
அப்பொழுது மணமக்களை வாழ்த்தி அவர் பேசியதாவது, "இது கழக குடும்பத்தில் நடைபெறக்கூடிய திருமணம் நம்முடைய குடும்பத்தில் நடைபெறக்கூடிய திருமணம் என்கின்ற உணர்வோடு நாமெல்லாம் இதில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி கொண்டிருக்கிறோம்" என்றார், மேலும், தங்கபாண்டியன், ஐ.ஜி சந்திரசேகர் ஆகியோர் உடனான தனது நினைவுகளை பகிர்ந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் மேலும் கூறியதாவது, "தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்று நான் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அது உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும் சரி, பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி தி.மு.க வென்றுள்ளது. எதிர்காலத்தில் இனி வரக்கூடிய எந்த தேர்தலாக இருந்தாலும் தி.மு.க'தான் மிகப்பெரிய வெற்றி பெறப் போகிறோம் அதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் வர வேண்டிய அவசியம் இல்லை" என்றார்.
நடந்தது திருமண விழா, இருமனம் இணையும் விழா அங்கும் சென்று தேர்தல்கள் முடிந்த காலத்திலும் தேர்தலை பற்றி பேசி வந்திருக்கிறார் முதல்வர். சமீபத்தில்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்தது, அடுத்தபடியாக தமிழகத்தில் 2024'ல் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் திருமண விழாவில் கூட தேர்தல் பற்றிய யோசனையில் பேசி வந்துள்ளார் முதல்வர் என விமர்சனங்கள் வருகின்றன.