நீதிபதிகளை மிரட்டிய தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் பேச்சு - ராமநாதபுரம் எஸ்.பி எச்சரிக்கை

By : Mohan Raj
நீதிபதிகள் குறித்து தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் வரம்புக்கு மீறி பேசியதன் விளைவாக ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் கார்த்திக், "சாதி, மத ரீதியில் வன்முறையை தூண்டும் விதமாக பேசினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என அறிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தெற்கு தெருவில் கடந்த 18'ஆம் தேதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பான கர்நாடக நீதிமன்றத் தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய தவ்ஹீத் ஜமாத் மாநில பொறுப்பாளர் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியை அவதூறாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், மத ரீதியாகவும் வன்முறையை தூண்டும் வகையிலும் பேசியதாக தவ்ஃபீக் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சாதிக் பாஷா ஆகியோர் மீது திருவாடானை போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து கடந்த 20ஆம் தேதி சாதிக் பாஷா கைது செய்த போலீசார் அவரை முதுகுளத்தூர் கிளை சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவான தவ்ஃபீக்கை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது அதன்படி சென்னை சேப்பாக்கம் அண்ணா தெருவில் மறைந்திருந்த தவ்ஃபீக்கை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் இது தொடர்பாக செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார் அதில், "ராமநாதபுரம் மாவட்டத்தில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் பொதுக்கூட்டங்களில் சாதி, மத ரீதியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
