அண்ணாமலை மீது காழ்ப்புணர்ச்சியில் திருமாவளவன்
By : Mohan Raj
அண்ணாமலை குறித்த கேள்விக்கு டென்ஷனாக பதில் அளித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.
சேலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.முmக கூட்டணியில் வெற்றிபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளை நேற்று வி.சி.க தலைவர் திருமாவளவன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, "நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது இதற்கு ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்துள்ள போர் தான் காரணம் என மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது" என்றார்.
அப்பொழுது அண்ணாமலை பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், "தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை அரசியல் பேச தெரியாமல் அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து அவதூறு பேசி வருகிறார். தன் மீது கவனத்தை ஈர்ப்பதற்காக அவர் தி.மு.கவை பற்றியும் முதலமைச்சரை பற்றியும் விமர்சனம் செய்து வருகிறார்" என கூறினார்.
தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் முதல்வரின் நடவடிக்கைகளை தைரியமாக விமர்சித்து வருவது பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மட்டுமே, இதனால் தி.மு.க'வின் பல எம்.பி, எம்.எல்.ஏ'க்கள், அமைச்சர்கள் போன்றோர் கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில் அண்ணாமலை பற்றிய கேள்விக்கு 'அவர் அரசியல் பேசத் தெரியாமல் பேசி வருகிறார்' என திருமாவளவன் கூறியுள்ளது அண்ணாமலை மீது உள்ள திருமாவளவனின் காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது.