Kathir News
Begin typing your search above and press return to search.

மொத்த ஊடகங்களும், கைகட்டி வாய்பொத்தி அடிமை சேவகம் செய்யனுமா? தி.மு.க. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை!

மொத்த ஊடகங்களும், கைகட்டி வாய்பொத்தி அடிமை சேவகம் செய்யனுமா? தி.மு.க. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை!

ThangaveluBy : Thangavelu

  |  24 May 2022 2:12 AM GMT

'ஜி ஸ்கொயர்' என்கிற தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் ஒரு தனிநபர் மீது 24.05.2022 அன்று இரவு 9 மணிக்கு சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படுகிறது. மேலும், இந்தப் புகாரில் ஜூனியர் விகடன் நிறுவனத்தின் இயக்குநர்கள் மூவர் பெயரையும் மற்றும் சவுக்கு சங்கர், மாரிதாஸ் ஆகியோர் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புகாரின் உண்மையை முழுமையாக விசாரித்து அறியாமல், வேகவேகமாக ஜூனியர் விகடன் நிறுவன இயக்குநர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பது, இதன் பின்னணி குறித்து கேள்விகளை எழுப்புகிறது. ஜூனியர் விகடன் பெயரையோ அல்லது சவுக்கு சங்கர் மற்றும் மாரிதாஸ் ஆகியோரது பெயர்களைக் கூறி 'ஜி ஸ்கொயர்' நிறுவனத்தை யாராவது மிரட்டி இருந்தால், அந்நிறுவனத்தினர் விகடன் நிறுவனத்தையோ அல்லது அதில் உள்ள இரண்டு நபர்களையோ அணுகி தெளிவு பெற்றிருக்கலாம். அது உண்மையா என்றும் விசாரித்திருக்கலாம். ஆனால், காவல்துறையில் 'ஜி ஸ்கொயர்' புகார் அளிப்பதும், இரவோடு, இரவாக மின்னல் வேகத்தில் சென்னை மாநகர காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதும், ஆளும் கட்சிக்கு எதிராக செய்தி வெளியிடும் பத்திரிகையாளர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கையாகவே கருத வேண்டி உள்ளது.

முதல் தகவல் அறிக்கையில் 3வது குற்றவாளியாக 'ஜூனியர் விகடனோடு சம்பந்தப்பட்டவர்கள்' என்பது, விகடன் குழுமத்தின் உரிமையாளர் முதல் அந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஓட்டுநர் வரை அனைவரையும் கைது செய்ய, காவல்துறைக்கு உரிமை வழங்கி உள்ளது.

இந்த பொய் புகாரை வழக்காக பதிவு செய்து ஊடகங்களை மிரட்டும் போக்கு கண்டனத்திற்கு உரியது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பத்திரிகை சுதந்திரம், கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம் பற்றியெல்லாம் வாய்கிழியப் பேசிய இன்றைய ஆட்சியாளர்கள், அதிகார மமதையின் உச்சத்திற்கே சென்றுள்ளார்கள். அனைத்து செய்தி ஊடகங்களும் கைகட்டி, வாய்பொத்தி, தங்களுக்கு அடிமை சேவகம் செய்ய வேண்டும் என்று இந்த அரசு எதிர்பார்க்கிறது. தாங்கம் செய்யும் தவறுகளை எந்த ஒரு ஊடகமும் மக்களிடம் கொண்டு சேர்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று காவல்துறைக்கு இந்த அரசு உத்தரவுவிட்டது போல் தெரிகிறது.

பத்திரிகை சுதந்திரம் பற்றி பேசும் திமுகவின் அரசியல் கூட்டாளிகள், ஒரு சில சமூக வலைதளங்கள் மற்றும் சமூக ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள் சங்கங்கள், பத்திரிகை சுதந்திரத்தின் பாதுகாவலர்கள் என்று தங்களைத் தாங்களே தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஒருசில ஆங்கிய மற்றும் தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்கள், ஒரு சில செய்தி ஊடகங்கள் என அனைத்தும் இந்த விடியா அரசின் பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கைகளை வாய்மூடி, கைகட்டி மௌனமாக வேடிக்கை பார்ப்பதை பார்க்கும்போது, நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால், என்ற பாரதியாரின் கவிதைகள் நினைவுக்கு வருகிறது. தங்களுக்கு வெண்சாமரம் வீசும் காட்சி ஊடகங்கள் மற்றும் அச்சு ஊடகங்கள் மட்டுமே செயல்பட வேண்டும் என்ற மமதையே இந்த அரசு விட்டொழிக்கவேண்டும். காவல்துறை அதிகாரிகள் தங்களிடம் கொடுக்கப்பட்ட புகாரை விசாரித்து, உண்மைத் தன்மையை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டு, விட்டு திமுவிற்கு வேண்டப்பட்டவர்கள் என்பதால் வழக்குப்பதிவு செய்ய உடனே கைது செய்வது கண்டிக்கத்தக்கது. இதற்கு தமிழக மக்கள் விரைவில் சம்மட்டி அடி கொடுப்பார்கள் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News