சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு - கண்டுகொள்ளாமல் பிரதமரை பார்த்து சவுண்டு விடும் முதல்வர் ஸ்டாலின்

By : Mohan Raj
தமிழகத்தில் சீர்கெட்டுள்ள சட்டம் ஒழுங்கை அரசு கட்டுப்படுத்துமா என மக்கள் எதிர்பார்த்துவரும் வேளையில் மக்களுக்கு பதில் சொல்லாமல் முதல்வர் ஸ்டாலின் அரசியலுக்காக பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோரை விமர்சனம் செய்வது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சி அரியணை ஏறியதுமுதலே, சட்டம் ஒழுங்கு பிரச்சனையைதான் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கையிலெடுத்து வருகின்றன, அதற்கு ஏற்றார்போல் இந்த 4 நாட்களாகவே அதிர்ச்சி சம்பவங்கள் அதிகரித்து விட்டன.. சென்னை பெரம்பூரில் நகைகடையில் மர்மநபர்கள் தங்கம், வைரம் என மொத்தம் 9 கிலோ நகைககைளை கொள்ளையடித்து சென்றனர்! அதேபோல, திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 நாளுக்கு முன்பு, ஒரே நாளில் 4 ஏடிஎம் மையங்களை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை கோர்ட் வாசலிலேயே, அதுவும் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டது மாநிலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது... பொதுமக்கள் இதை பார்த்துவிட்டு, அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்!
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பின்புறம் இரு இளைஞர்கள் மீது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரி தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். அப்போது மர்ம கும்பல் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். இன்னொருவரோ, ரத்த காயங்களோடு தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவத்தின்போது அதிர்ச்சி என்னவென்றால், கொலை செய்த கொலையாளிகள் சர்வசாதாரணமாக நடந்து செல்கிறார்கள்.. இந்த சிசிடிவி பார்த்து மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தமிழகத்தின் இந்த கொடூர நிலை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அண்ணாமலை, கொலை நகரமாகிக் கொண்டிருக்கும் கோவை. கோவையில் பொதுமக்கள் முன்னிலையிலும், நீதிமன்ற வளாகத்திலும் நேற்று மட்டும் இரண்டு கொலைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அது மட்டுமல்லாது, துப்பாக்கிக் கலாச்சாரமும் தலையெடுத்துள்ளது.
பொதுமக்கள் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உண்டாக்கி, அதில் தமிழகத்தைத் தள்ளியிருக்கிறது திறனற்ற திமுக அரசு' என குறிப்பிட்டுள்ளார்.
இந்த கோவை சம்பவத்தை குறிப்பிட்டு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது கருத்தை குறுப்பிட்டிருந்தார். அதை தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, 'கோவையில் வீடுபுகுந்து துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் படுகொலை நிகழ்ந்துள்ளது. அதே கோவையில் நீதிமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் கண்முன்னே மேலும் ஒருவர் கொலை, திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் தொடர் கொள்ளை, சென்னையில் நகைக்கடையில் கொள்ளை, போன்ற சம்பவங்களை பார்க்கும்போது தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு என்பதே இல்லையோ என்ற கேள்வி எழுவதுடன், நிர்வாகத்திறனற்ற இந்த ஆட்சியில்,பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படுகிறார்கள் தமிழ்நாட்டில் மேலே குறிப்பிடபட்டுள்ள சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதற்கு இதுவே சாட்சி' என்று காட்டமாக கூறியிருந்தார்.
இப்படி தமிழக மக்கள் கொலை, கொள்ளை என்ற தொடர் சம்பவங்களின் அச்சத்தால் வாழும்போது, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பும்போது அதற்கு விளக்கம் கொடுக்க வேண்டிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அதற்கு முறையான விளக்கம் கொடுக்காமல் 'நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியதில் மக்களுக்கானது எதுவுமே இல்லை. பிரதமர் பதில் உரையிலும் வார்த்தை ஜாலம் மட்டுமே இருந்தது' என கூறியுள்ளார், தமிழகத்தில் இத்தனை சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கும் வேளையில் அதை கவனிக்காமல் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோரை குற்றம் சொல்வது குறித்து அரசியல் விமர்சகர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
