Kathir News
Begin typing your search above and press return to search.

திமுக அரசுக்கு எதிராக திரண்ட தொழிற்சங்கங்கள் - மிரண்ட முதல்வர்!

திமுக அரசுக்கு எதிராக திரண்ட தொழிற்சங்கங்கள் - மிரண்ட முதல்வர்!

Mohan RajBy : Mohan Raj

  |  8 March 2023 9:20 AM GMT

'இதற்கு அதிமுக ஆட்சியை தேவலாம் என தேவை இல்லாம நினைக்க வைத்து விடாதீர்கள்' முதல்வரே என தொழிற்சங்கங்கள் திமுக அரசுக்கு எதிராக திரண்டு உள்ளனர்.

திமுக அரசு தற்போது சென்னை போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்க முடிவு எடுத்தது, சென்னையில் மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் 3,436 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 625 வழித்தடங்களில் 29.5 லட்சம் பயணிகள் தினசரி பேருந்து சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாநகரப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது எனக்கூறி ஒப்பந்த அடிப்படையில் 1,000 பேருந்துகளை அறிமுகம் செய்ய தனியார் பேருந்து உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆலோசித்த சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவாக நடப்பாண்டு இறுதிக்குள் புதிதாக 500 தனியார் பேருந்துகளை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

இதன் அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு மாநகரப் போக்குவரத்து கழகம் டெண்டர் கோரியுள்ளது. இவர்கள் தங்களின் அதிகாரிகள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் ஆகியோரை பயன்படுத்தி கொள்ளலாம். என தனியாரை சென்னை போக்குவரத்து கழகத்தில் உள்நுழைக்கும் வேலையாய் வேலையை முன்னெடுத்தது திமுக அரசு.

இதனை கண்டித்து தொழிற்சங்கங்கள் போராட்டத்துக்கு அறிவித்தது, அறிவித்ததுடன் மட்டுமல்லாமல் சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் நேற்று காலை 6 மணிக்கே போராட்டத்தில் குதித்தது. அதிமுகவின் தொழிற்சங்கம் விரைவில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தது. விஷயம் விபரீதம் அடைந்ததை புரிந்துகொண்ட திமுக உடனடியாக இந்த விவகாரத்தில் பின் வாங்கியது.

பின் வாங்கியது மட்டுமல்லாமல் அரசு தொழிற்சங்கங்கள் இந்த முடிவை எதிர்த்த காரணத்தினால் நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறும்போது, 'சென்னையில் தனியார் மாநகரப் பேருந்து இயக்கப்படும் என்பது தவறான புரிதல். 1,000 தனியார் பேருந்துகளை இயக்க அதிமுக ஆட்சியில் உலக வங்கி பரிந்துரைத்தது. தனியார் பேருந்துகளை இயக்கலாமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள ஆலோசகரை தேர்வு செய்யவே டெண்டர். தனியாரிடம் பேருந்து வாங்கி அரசுத் தடத்தில் இயக்கவே திட்டமிடப்பட்டுள்ளது” என்று பின்வாங்கினர்.

இந்த நிலையில் தற்போது தொழிற்சங்கங்கள் அனைத்தும் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி உள்ளன அந்த கடிதத்தில் உங்களது தந்தை போல் இல்லை நீங்கள் என குறிப்பிட்டு ஒரு விஷயத்தை சேர்த்துள்ளனர். 'தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துத் துறையில் செயல்பட்டு வந்த பேருந்துகளை 1972-ல் போக்குவரத்துக் கழகமாக்கப்பட்டது. தனியார் வசமிருந்த பேருந்துகளையும் 1973 ஆம் ஆண்டில் தேசிய மயமாக்கி, போக்குவரத்துக் கழகங்களுடன் இணைத்த பெருமை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைச் சாரும்.

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடைபெறும்போது கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொழிலாளர்களுக்கு எதிராக போடப்பட்ட அரசாணைகள் 321 முதல் 328 வரையில் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. ஆனால் திரும்பப் பெறப்படவில்லை. ஆகவே தாங்கள் இதன் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு அரசாணைகள் 321 முதல் 328 வரை திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு அமர்த்தி போக்குவரத்துக் கழகங்களில் இயக்குவதற்கு வெளியிட்டுள்ள அறிவிப்புகளை திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என அந்த கடிதத்தில் தொமுச, சிஐடியு,ஏஐடியுசி உள்ளிட்ட 9 சங்கங்கள் கைழுத்திட்டு முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர், இப்படி தொழிற்சங்கங்கள் திமுக அரசுக்கு எதிராக திரண்டு வருவதால் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் முதல்வர் ஸ்டாலின் விழித்து வருகிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News