Kathir News
Begin typing your search above and press return to search.

எதற்காக இப்படி பதறிப் பாய்கிறீர்கள் முதல்வரே? அண்ணாமலை கேள்விகளால் அதிரும் அறிவாலயம்!

எதற்காக இப்படி பதறிப் பாய்கிறீர்கள் முதல்வரே? அண்ணாமலை கேள்விகளால் அதிரும் அறிவாலயம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Jun 2023 4:37 AM GMT

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 4 பக்க அறிக்கை ஒன்றை இன்று தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த அறிக்கையில், "தொட்டுப்பார், சீண்டிப்பார் என்றெல்லாம் பேசுவது கட்சி மேடைகளிலே கூட்டம் கலையாமல் பார்த்துக் கொள்வதற்காக ஒரு சாதாரண மேடைப் பேச்சாளர் பேசும் தொனி. ஆனால், நீங்கள் இப்படிப் பேசுவது நீங்கள் வகிக்கும் முதலமைச்சர் என்ற பதவிக்கு உகந்ததா? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திமுக பலமுறை எதிர்க்கட்சி வரிசையிலும் சில முறை ஆளுங்கட்சியாகவும் சட்டமன்றத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளது என்பது தமிழக மக்கள் அனைவரும் அறிந்ததே. சட்டத்திட்டங்கள் விசாரணை நடைமுறைகள் அனைத்தும் தெரிந்த ஏறத்தாழ 30 ஆண்டுகள் சட்டமன்ற அனுபவம் மிக்க நீங்கள் ஐந்து கட்சி மாறிவந்த ஒருவரை காப்பாற்ற இப்படி இரண்டாம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா? தமிழகத்தில் எத்தனையோ குற்றங்கள் நடந்தபோதுகூட வாய் திறக்காத நீங்கள் கரூரில் கடந்த மே 26 ஆம் தேதி சோதனைக்குவந்த வருமான வரித் துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட போது கண்டனம் கூட தெரிவிக்காத நீங்கள் இந்தக் குறிப்பிட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவருக்காக இப்படிப் பொங்குவது நீங்கள் வகிக்கும் பதவிக்கு அழகா?

உங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன் கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் நாள் குளித்தலையில் நடந்த பொதுக் கூட்டத்தில் நீங்கள் குற்றம்சாட்டிய நடவடிக்கை எடுக்கக் கூறிய வழக்குகளில் ஒன்றில்தான் இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. 7 வருடங்களில் என்ன மாறியிருக்கிறது? நீங்கள் கோரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதில் உங்கள் கட்சி சார்பாக வரவேற்றல்லவா இருக்க வேண்டும். சிபிஐ விசாரணைக்கு முன் அனுமதி வேண்டுமென்று அவசர அவசரமாக முடிவெடுத்துள்ளீர்கள்.

நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது கடந்த பல ஆண்டுகளில் அதாவது மத்தியில் பாஜக ஆட்சி உள்ள போதே எத்தனை முறை சிபிஐ விசாரணை கோரியுள்ளீர்கள் என்பது நினைவு இருக்கிறதா? நீங்கள் இப்போது ஆளுங்கட்சியான பின்பு, சிபிஐ உங்கள் அனுமதி பெற்றுத்தான் உள்ளே வர வேண்டும் என்று சொல்வது நீங்கள் நடத்திவரும் ஆட்சியின் அவலங்களில் வெளிப்பாடாகவே தெரிகிறது.

அதுமட்டுமல்ல உங்கள் கட்சி எதிர்க்கட்சியாக இருந்தபோது உங்களுக்கான தனிப்பட்ட தமிழக காவல்துறையின் பாதுகாப்பை நம்பாமல் மத்திய ரிசர்வ் படையின் பாதுகாப்பை கேட்ட வரலாறுகளும் உண்டு. தற்போது என்ன மாறிவிட்டது என்று நினைக்கிறீர்கள்?

யாரை அச்சுறுத்த இத்தனை ஆவேசமான வார்த்தைகள். உங்கள் கட்சித் தொண்டர்களை எவ்வாறு வழிநடத்துகிறீர்கள்? இதுபோன்று பேசுவது தனிச்சிறப்பு வாய்ந்த பல்வேறு பெருமைகளை தன்னகத்தே கொண்ட நமது மாநிலத்துக்கு உகந்தது கிடையாது.

நீங்கள் எட்டரைக்கோடி மக்களுக்கான முதல்வரா அல்லது உங்கள் குடும்பத்துக்கும் உங்களைச் சுற்றியுள்ள குறுகிய வட்டத்துக்குமான முதல்வரா என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். மற்றவர்கள் செய்த தவறுக்கு நீங்கள் சிபிஐ விசாரணை கோரும்போது நீங்கள் செய்த தவறுக்கு நாங்கள் சிபிஐ விசாரணை கோருவதில் என்ன குற்றம் கண்டீர்கள்? எதற்காக இப்படிப் பதறிப் பாய்கிறீர்கள் முதல்வரே" என்று பதிவிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News