ஆ.ராசா வாயை அடைத்த தேர்தல் ஆணையம் - பிரச்சாரம் செய்ய அதிரடி தடை!

தி.மு.க துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரச்சாரம் செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தி.மு.க வேட்பாளர் எழிலனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கட்சியில் அடிமட்ட தொண்டராக இருந்து உழைத்து முதல்வர் வேட்பாளராக உயர்ந்தவர் மு.க ஸ்டாலின், அவர் முறையாக திருமணம் நடந்த தாய்க்கு முறையாக பிறந்த குழந்தை எனவும், முதல்வர்
எடப்பாடி பழனிச்சாமி அப்படியல்ல, முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் குறுக்கு வழியில் பதவிக்கு வந்தவர். அதாவது கள்ள உறவில் பிறந்த குழந்தை என ஆபாசமாக பேசினார்.
இதனை தொடர்ந்து ஆ.ராசா பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக கடந்த 27-ம் தேதி புகார் அளித்தது.
இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தில் ஆஜராகி இந்த விவகாரம் தொடர்பாக ஆ.ராசா அளித்துள்ள விளக்கம் திருப்தி அளிக்கும் விதத்தில் இல்லை என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது தி.மு.க'வின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து ஆ.ராசா பெயரை நீக்கியும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஆ.ராசாவின் பேச்சு கண்ணியக்குறைவாக மட்டும் அல்ல தாய்மையை இழிவு செய்யும் வகையில் உள்ளது என்றும் தேர்தல் ஆணையம் கண்டித்துள்ளது. இதனிடையே தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து ஆராசா தாக்கல் செய்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.