"கொரோனோ காலத்தில் எங்களுக்கு ரமலான் இரவு நேர வழிபாட்டிற்கு அனுமதி வேண்டும்" - தமிமுன் அன்சாரி!

ரமலான் தொடங்குவதால் "எங்களுக்கு இரவு நேர வழிபாட்டுக்கு அனுமதி வேண்டும்" என தமிமுன் அன்சாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனோ ஊரடங்கு குறித்து அரசு வழிமுறைகள் வெளியிட்டிருக்கும் வேளையில் இஸ்லாமியர்களின் ரமலான் வழிபாட்டிற்கு சற்று விலக்கு வேண்டும் என அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவல் குறிப்பிட்டுள்ளதாவது, "கொரோனோ தொற்றின் இரண்டாவது அலை பரவுவதால் தமிழக அரசு மீண்டும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது . மக்களின் உயிர் காக்கும் நடவடிக்கைகளை எடுப்பது தவிர்க்க இயலாதது என்பதால் இதை வரவேற்கிறோம்.
அதே சமயம் வழிபாட்டு மையங்கள் என்பது மக்கள் மன அமைதி பெறும் இறையில்லங்களாக இருப்பதால் அங்கு மக்கள் கட்டுப்பாடுகளுடன் வந்து செல்வதற்கு சில சலுகைகளை அளிக்க வேண்டும். குறிப்பாக புனித ரமலான் மாதம் இம்மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தொடங்குவதால், மக்கள் இரவு நேர வழிபாட்டை நடத்தும் வகையில் இரவு 10 மணி வரை மசூதிகள் திறந்திருக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இதற்கு மக்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அரசு வெளியிடலாம்" என அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.