'சமக்ர சிக்க்ஷா' திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 1050 கோடி நிதி எங்கே! அண்ணாமலை கேள்வி!
சமக்ர சிக்க்ஷா திட்டத்தின் கீழ் மத்திய அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் வழங்கிய 1,050 கோடி நிதி எங்கே சென்றது என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி நமது குழந்தைகள் அனைவருக்கும் தரமான சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2018 - 2019 ஆம் ஆண்டு சமக்ர சிக்ஷா திட்டத்தை கொண்டு வந்தார் இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்றான தகவல் தொடர்பு தொழில்நுட்ப கல்வி தொடர்பான சில விதிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது. இதன்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பில் இருந்து பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்பம் தனி பாடமாக இடம்பெற வேண்டும் என்றும் இதற்காக ஒவ்வொரு பள்ளிகளிலும் ஐசிடி ஆய்வகம் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இவற்றை அமைக்க மூலதனச் செலவுகளுக்காக ரூபாய் 6.40 லட்சமும் இந்த பாடத்தை பயிற்றுவிக்கும் பயிற்றுனருக்கு மாத ஊதியமாக 15 ஆயிரம் மற்றும் இதர செலவுகள் சேர்த்து ஆண்டுக்கு 2.5 இலட்சமும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது? இதன் படி கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகவல் தொடர்பு கல்வி திட்டத்துக்காக மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கி உள்ள நிதி ரூபாய் 150 கோடி. அதன்படி ஆறாம் வகுப்பில் இருந்து +2 வரை தகவல் தொடர்பு தொழில்நுட்பம் என்பது தனிப்பாடமாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் அறிவியல் பாடத்தின் ஒரு பகுதியாக மட்டுமே வைக்கப்பட்டுள்ளது.
இதனால் சிறு வயதில் இருந்தே தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் நமது குழந்தைகள் சிறந்து விளங்க வேண்டும் என்ற இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமே சிதைந்து இருக்கிறது. கேரள மாநிலத்தில் தமிழ் உட்பட மும்மொழிகளில் ஆறாம் வகுப்பில் இருந்து தகவல் தொடர்பு கல்விப் பாடம் உள்ளது .கடந்த மூன்று ஆண்டுகளில் சமக்கிர சிக்ஷா திட்டத்தின் கீழ் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் செயல்பாடுகள் பாடத்திட்டத்திற்காக மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிய ரூபாய் 150 கோடி எங்கே சென்றது? அரசு மற்றும் அரசு உதவி பெறும் எத்தனை பள்ளிகளில் ஐசிசி ஆய்வகம் செயல்பாட்டில் உள்ளது .ஏன் ஆறாம் வகுப்பில் இருந்து தகவல் தொடர்பு கல்வி தனிப் பாடமாக அமைக்கப்படவில்லை. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறார். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.