ஆற்று மணல் 13,600 ரூபாயா?- அதிர்ச்சியில் பொதுமக்கள்!
By : Mohan Raj
ஒரு யூனிட் ஆற்றுமணலுக்கான விலை ஆயிரம் ரூபாய் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் அந்த அறிவிப்பு வெறும் அறிவிப்பாகவே உள்ளது என மக்கள் புலம்புகின்றனர். சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் 13,600 ரூபாய்க்கு ஒரு யூனிட் ஆற்றுமணல் விற்கப்படுவதால் வீடு கட்டுவோர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் மணல் குவாரிகள் சில மாதங்களாக இயங்காததால் அரசின் திட்டத்தில் ஆற்றுமணல் கிடைப்பதில்லை. இந்நிலையில் குவாரிகளை இயக்கி ஆன்லைன் முறையில் மணல் விற்க தமிழக அரசு புதிய விதிகளை சமீபத்தில் வெளியிட்டது. இந்த புதிய விதிகளின்படி 16 இடங்களில் மணல் குவாரிகள் திறக்கப்பட்டு ஒரு யூனிட் ஆற்றுமணல் ஆயிரம் ரூபாய்க்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் தி.மு.க அரசு ஆயிரம் ரூபாய்க்கு ஆற்றுமணல் கொடுக்கிறது என்று மக்கள் மகிழ்ச்சி அடைந்த வேளையில் ஒரு யூனிட் ஆற்றுமணல் 13 ஆயிரத்து 600 ரூபாய் 2.5 யூனிட் அடங்கிய ஒரு லோடு மணல் 34 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
இதுகுறித்து கட்டுமானத் துறையில் உள்ள சிலர் கூறியதாவது, "அரசு ஒரு யூனிட் மணல் ஆயிரம் ரூபாய் என நிர்ணயித்து உளளனர். ஆனால் 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கு ஒப்பந்தக்காரர்கள் விற்கின்றனர். தடுக்க வேண்டிய அரசு மௌனம் காக்கிறது. இதில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.