திருவாரூரில் 17 லட்சம் ஹவாலா பணத்துடன் பிடிபட்ட ரியாஸ்கான் - அரசியல்வாதிகளுக்கு தொடர்பா?
By : Mohan Raj
திருவாரூரில் ரியாஸ்கான் என்பவர் 17 லட்சம் ஹவாலா பணத்துடன் பிடிபட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் உள்ள அத்திக்கடை என்ற பகுதியில் காவல்துறையினரின் சோதனை சாவடி உள்ளது. திருவாரூரிலிருந்து கும்பகோணம் செல்பவர்கள் இந்த சாலையின் வழியாக செல்வது வழக்கம். நள்ளிரவு இதன் வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபரை, காவலர் மகேந்திரன் வழிமறித்து நிறுத்தியுள்ளார். அந்த நபரின் பேச்சு, முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால், அவரது இருசக்கர வாகனத்தை காவலர் மகேந்திரன் சோதனை செய்தபோது, 17 லட்சம் ரூபாய் பணம் இருந்துள்ளது.
அப்போது அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இந்த நபர் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த நியாஸ்கான் என்பதும். ஹவாலா பணத்தை ஒரு குறிப்பிட்ட நபர்களிடமிருந்து மற்றவர்களிடம் கொண்டு சேர்க்கக்கூடிய குருவி என அழைக்கப்படும் சட்டவிரோத வேலைகளில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்திருக்கிறது. அதிராம்பட்டினத்தை சேர்ந்த இர்பான் என்பவர், ரியாஸ்கானிடம், இந்த பணத்தை கொடுத்து, வேறு சில நபர்களிடம் இதனை ஒப்படைக்க சொல்லியிருக்கிறார்.
நியாஸ் கானிடம் ஹவாலா பணத்தை கொடுத்த இர்பான் யார் என்பது குறித்தும், மேலும் ஹவாலா பண பரிமாற்ற நெட்வொர்க்கில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.