திருச்சியில் ரேஷன் கடையை கைப்பற்றிய தி.மு.க-வினர்! பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,000 கை மாறியது!

திருச்சியில் கரோனா நிவாரண நிதியின் முதல் தவணை ரூ.2,000 வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கிவைத்தனர். கரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக திருச்சி மாவட்டத்தில் 1,226 ரேஷன் கடைகள் மூலம் 8,07,165 ரேஷன் அட்டைதாரர்களுக்கு மொத்தம் ரூ.161.43 கோடி வழங்கப்பட உள்ளது.
தற்போது கரோனா நிவாரண நிதி திட்டத்தில் தி.மு.க.,வினர் தலையிட்டு சிக்கலை ஏற்படுத்தி வருகின்றனர். பழைய பாஸ்போர்ட் அலுவலகம் அருகே உள்ள ரேஷன் கடை, 16வது வார்டுக்கு உட்பட்ட ஜீவா நகர் ரேஷன் கடைகளில், ரேஷன் கடை பணியாளர்களுக்கு பதிலாக, அந்தந்த பகுதி தி.மு.க நிர்வாகிகள், கொரோனா நிவாரண நிதியை பொதுமக்களுக்கு வழங்கினர்.
அதே போல், 14வது வார்டுக்கு உட்பட்ட தாராநல்லுார் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் முற்றிலுமாக திமுகவினர் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
தி.மு.க., கொடிகளை தோரணம் கட்டி, கிட்டத்தட்ட கட்சி அலுவலகம் போலவே மாற்றிவிட்டனர். மாவட்டத்தின் பல பகுதிகளில், எல்லை மீறி செல்வதை பார்த்த மக்கள், அரசு அறிவித்த கொரோனா நிவாரண நிதியை, தி.மு.க.,வினர் தலையீடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
கிஷோர்குமார் என்ற அரசியல் பிரமுகர் இது குறித்து மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினியிடம் புகார் மனு அளித்தார்.