எடப்பாடியார் 2500 ரூபாய் வழங்கியதற்கே கணக்கு கேட்ட ஸ்டாலின், இப்போது 4000 ரூபாயை எங்கிருந்து கொடுக்கப் போகிறார்?

கடந்தாண்டு கொரோனா பரவலின் போது ஊரடங்கினால் முடங்கிய பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் பொங்கல் சிறப்பு தொகுப்புடன் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு 2,500 ரூபாய் வழங்கும் திட்டத்தை, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தினார்.
இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த சிறப்பு திட்டத்திற்கு அரசு எவ்வாறு நிதியை ஒதுக்கும்?, தமிழகத்தின் நிதி நிலைமை பலவீனமாக உள்ள நிலையில் இது சாத்தியமில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு முன்வைத்தார்.
இருப்பினும் பொதுமக்கள் நலனை கருதி, குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று அரசு டோக்கன் விநியோகம் செய்தது.
இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து திமுக தரப்பு நீதிமன்றத்தை நாடியது. இந்த நிலையில் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள ஸ்டாலின், குடும்ப அட்டைத்தாரர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இதற்கு 8307 கோடி ரூபாய் செலவாகும் நிலையில் அதற்கான நிதி ஆதாரங்களுக்கு திமுக அரசு என்ன செய்யும்?, எவ்வாறு சமாளிக்கும்? என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதிமுக அரசு நலத்திட்டங்களை அறிவித்த போது நிதி ஆதாரம் குறித்து கேள்வி எழுப்பி வந்த ஸ்டாலின் தற்போது எந்த நிதியை வைத்து இதனை செயல்படுத்தப்போகிறார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.