'ஜெய்பீம்' விவகாரம் - வன்னியர்களை இழிவுபடுத்திய சூர்யா ரூ.5 கோடி இழப்பீடு தர அதிரடியாக நோட்டீஸ் !
By : Mohan Raj
வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும், நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வன்னியர் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் படம் 'ஜெய் பீம்'. பழங்குடியின மக்களின் வாழ்வியலை மையமாக எடுக்கப்பட்ட இப்படம் மீது பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் ஜெய் பீம் படத்தில் பழங்குடியினர்களை சித்திரவதை செய்யும் குருமூர்த்தி என்கிற போலீஸ் கதாபாத்திரம் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் போல் காட்டப்பட்டு இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. படத்தில் ஒரு காட்சியில் அவர் பின்னணியில் வன்னியர் சங்க காலண்டர் இருப்பதாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
தற்பொழுது 'ஜெய் பீம்' பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும் இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த நோட்டீஸில், ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும், வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோராவிட்டால் அனைவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.