Kathir News
Begin typing your search above and press return to search.

மது விற்பனை குறைந்ததால் திமுக அரசு கவலை : மாதம் 5% அதிகரிக்க இலக்கு! இது தான் மக்களுக்கான மாடலா!

மது விற்பனை குறைந்ததால் திமுக அரசு கவலை : மாதம் 5% அதிகரிக்க இலக்கு! இது தான் மக்களுக்கான மாடலா!
X

SushmithaBy : Sushmitha

  |  17 Aug 2024 1:23 PM GMT

தமிழகத்தில் அரசே முன்னெடுத்து நடத்தும் டாஸ்மார்க் விற்பனையில் தமிழக மக்கள் தொடர்ந்து பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக குடும்பத்தலைவிகள் மற்றும் குழந்தைகள் பெரும் பாதிப்புகளை சந்திக்கின்றனர். ஆட்சியில் அமர்ந்தால் மதுக்கடைகள் முற்றிலும் மூடப்படும் என்று கூறி வாக்குறுதிகள் மற்றும் பிரச்சாரங்களை மேற்கொண்ட திமுகவின் முக்கிய அமைச்சர்கள் வெற்றி பெற்ற அடுத்த கணமே மதுக்கடைகள் குறைக்கப்படும் என்றுதான் கூறினோம் என்று மொத்தமாக மாற்றி பேசிய சம்பவங்களை நம் தமிழகத்தில் பார்த்திருக்கிறோம்!

அதுவும் திமுக ஆட்சி பெறுவதற்கு முன்பு என்ன பேசியது, ஆட்சியைப் பெற்றவுடன் என்ன பேசியது என அனைத்து வீடியோக்களுமே சமூக வலைத்தளங்களில் இன்றளவும் உலா வந்து கொண்டு தான் இருக்கிறது. தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை திராவிட மாடல் ஏற்ற பிறகில் இருந்து மதுவிற்கு அடிமையாவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது, குறிப்பாக இளைஞர்களும் மதுவிற்கு அடிமையாகி நடுரோட்டில் விழுந்து கிடக்கும் செய்திகளும் அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளது. இந்த நிலையில், மது விற்பனை குறைவதாக திமுக அரசு கவலையுறுவதாகவும், மாதம் 5% மது விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில், தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் மது விற்பனை 4% குறைந்திருப்பது குறித்து தமிழக அரசு பெரும் கவலை கொண்டிருப்பதாகவும், மது விற்பனை இலக்கை எட்டும் வகையில் மது விற்பனையை ஒவ்வொரு மாதமும் 5% அளவுக்கு அதிகரிக்க வேண்டும் என்று டாஸ்மாக் அதிகாரிகளுக்கு நிர்வாகம் ஆணையிட்டிருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மக்கள் நலன் காப்பதாகக் கூறிக் கொள்ளும் அரசு, மது விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

மது விற்பனையை அதிகரிப்பதற்காக விற்பனை அதிகாரிகள் மதுக்கடைகளுக்கு செல்ல வேண்டும் என்றும், மது விற்பனை இலக்கு எட்டப்படவில்லை என்றால் மாதாந்திரக் கூட்டத்தில் விளக்கமளிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அதிகாரிகளுக்கு வாய்மொழியாக டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதேபோல், விற்பனை இலக்கை தொடர்ந்து இரு மாதங்களுக்கு எட்டத் தவறும் விற்பனையாளர்களிடம் விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பப்படும்; அதன் பிறகும் விற்பனையை அதிகரிக்கவில்லை என்றால் அவர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் நல அரசா? மது ஆலை அதிபர்கள் நல அரசா? என்ற ஐயம் தான் ஏற்படுகிறது.

மது விற்பனை குறைந்தால், ஆஹா மக்கள் மது போதையிலிருந்து விடுபடுகிறார்களே? என்று நினைத்து மகிழ்ச்சியடைய வேண்டியது அரசு தான். ஆனால், மகிழ்ச்சி அடைவதற்கு மாறாக பதற்றம் அடைவது ஏன்? என்பது தான் புரியவில்லை. மது விற்பனைக்காக ஒரு போதும் இலக்கு நிர்ணயம் செய்வதில்லை; கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்பதற்காகத் தான் அரசு சார்பில் மது வணிகம் செய்கிறோம் என்று முதலமைச்சரும், மதுவிலக்குத் துறை அமைச்சரும் பல்வேறு தருணங்களில் கூறி வருகிறார்கள். ஆனால், இன்னொரு புறம் மது வணிகத்திற்கு அரசே இலக்கு நிர்ணயித்திருப்பது தலைகுனிய வேண்டிய செயலாகும்.

மது வணிகத்தை விற்பனையாளர்கள் எவ்வாறு அதிகரிப்பார்கள்? என்பது புரியவில்லை. சாலையில் செல்வோரையெல்லாம் மது குடித்து விட்டு செல்லுங்கள் என்று விற்பனையாளர்கள் அழைக்க வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறதா? என்று தெரியவில்லை. மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் தொழுநோயாளியின் கைகளில் இருக்கும் வெண்ணெய்க்கு ஒப்பானது என்று பேரறிஞர் அண்ணா கூறினார். ஆனால், அவர் வழியில் வந்ததாக கூறிக் கொள்ளும் அரசுகளோ அந்த வெண்ணெய்க்காக அலைகின்றன.

மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு தான் அரசை நடத்த வேண்டும் என்றால் அதை விட அவமானம் எதுவும் இல்லை. படிப்படியாக மது விலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அவரது பதவிக்காலம் முடிவதற்குள் அனைத்து மதுக்கடைகளையும் மூடி மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும். எந்தெந்த மாதங்களில் எவ்வளவு மதுக்கடைகள் மூடப்படும் என்பது குறித்த கால அட்டவணையையும் தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, மது கடைகளின் எண்ணிக்கையை எப்படி குறைப்பது, மதுவிற்கு அடிமையாகி உள்ளவர்களை எப்படி மீட்பது, எத்தனை மறுவாழ்வு மையங்கள் அமைப்பது என மதுவால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும் வகையில் பாஜக வெள்ளை அறிக்கையை கொடுத்தும் திமுக அதனை செயல்படுத்தாமல் இருப்பது தமிழக மக்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News