பாஜகவின் அடுத்த 5 ஆண்டுகால ஆட்சி குழந்தைகளின் எதிர்காலத்தை முன்னிறுத்தும் - அண்ணாமலை பதிவு!
![பாஜகவின் அடுத்த 5 ஆண்டுகால ஆட்சி குழந்தைகளின் எதிர்காலத்தை முன்னிறுத்தும் - அண்ணாமலை பதிவு! பாஜகவின் அடுத்த 5 ஆண்டுகால ஆட்சி குழந்தைகளின் எதிர்காலத்தை முன்னிறுத்தும் - அண்ணாமலை பதிவு!](https://kathir.news/h-upload/2024/06/05/1628229-adobeexpress2024041918012401.webp)
2024 லோக்சபா தேர்தலுக்கான முடிவுகள் அனைத்தும் வெளியானதை அடுத்து தமிழகத்தில் பெரும்பாலான தொகுதிகளில் பாஜக இரண்டாம் இடத்தில் முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மத்தியில் அடுத்த ஐந்து ஆண்டு கால ஆட்சியையும் பாஜக தன்வசமாக்கியுள்ளது.
இந்த நிலையில் தமிழக பாஜக மாநில தலைவரும் கோவை வேட்பாளருமான அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை ஆதரித்து, தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பெருமளவில் வாக்களித்த தமிழக மக்கள் அனைவருக்கும். இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இம்முறை நமது மக்களின் பிரிதிநிதிகளாக பாராளுமன்றம் செல்லமுடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், வரும் காலங்களில் உங்களின் அன்பையும் அங்கீகாரத்தையும் பெற எங்கள் உழைப்பை இரட்டிப்பாக்குவோம்.
நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி. தமிழக அரசியலில் தவிர்க்கவியலாத சக்தியாகத் தொடர, தமிழக மக்கள் பெரும் ஆதரவளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நமது பிரதமர் அவர்களின் அடுத்த ஐந்து ஆண்டு கால ஆட்சி, நமது குழந்தைகளின் எதிர்காலத்தை முன்னிறுத்தியதாக அமையும்.
எங்கள் மீது நம்பிக்கை வைத்து, வாக்களித்துள்ள அனைவருக்கும், மீண்டும் ஒரு முறை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்கள் நலனுக்கான குரலாய், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குரலும், தமிழக பாஜகவின் குரலும் தொடர்ந்து ஒலிக்கும்.
தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, தன்னலமின்றி கடுமையாக உழைத்த தமிழக பாஜக சொந்தங்கள், தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் தலைவணங்கி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வரும் காலங்களில், நமது மக்கள் நலனுக்கான நமது உழைப்பை இரட்டிப்பாக்குவோம். நம் உழைப்பிற்கு, நமது மக்கள் நிச்சயம் அங்கீகாரம் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
Source : The Hindu Tamil thisai