Kathir News
Begin typing your search above and press return to search.

"தேவை முழு ஊரடங்கு, குடும்பத்துக்கு ரூ.5000 வீதம் மாதம் நிவாரணம்" - அதிரடியாக கோரிக்கை விடுத்த டாக்டர்.ராமதாஸ்!

தேவை முழு ஊரடங்கு, குடும்பத்துக்கு ரூ.5000 வீதம் மாதம் நிவாரணம் - அதிரடியாக கோரிக்கை விடுத்த டாக்டர்.ராமதாஸ்!

Mohan RajBy : Mohan Raj

  |  5 May 2021 5:45 AM GMT

கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர தமிழக முழுவதும் பொது முடக்கம் செய்ய வேண்டும். அதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதத்திற்கு ரூ.5,000 வீதம் வாழ்வாதார உதவி வேண்டும் என பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஆளும்கட்சி வரிசையில் இருந்தாலும், எதிர்கட்சி வரிசையில் இருந்தாலும் மக்களின் தேவைகளுக்காக சரியான சமையத்தில் குரல் குடுத்து வரும் பா.ம.க நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் அவர்கள் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டதாவது, "தமிழ்நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை கட்டுப்படுத்த முடியாத வேகத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பரவல் 20,952 என்ற புதிய உச்சத்தை நேற்று எட்டியுள்ளது. கொரோனா பரவல் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 750% அதிகரித்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது மிகவும் கவலை அளிக்கிறது.

சட்டப்பேரவைத் தேர்தலின் போது பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இப்போது ஆபத்தான கட்டத்தை அடைந்திருக்கிறது. கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி தமிழகத்தின் தினசரி கொரோனா தொற்று 2817 மட்டும்தான்; சென்னையில் இந்த எண்ணிக்கை 1083 ஆக இருந்தது.

ஆனால், நேற்றைய நிலவரப்படி தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை சென்னையில் 6150 ஆகவும், தமிழகம் முழுவதும் 20,952 ஆகவும் அதிகரித்துள்ளன. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தேர்தலுக்குப் பிறகு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கு ஆகியவை பிறப்பிக்கப்பட்டன. அவற்றைத் தொடர்ந்து வணிக வளாகங்கள், திரையரங்குகள், குடிப்பகங்கள், பெரிய கடைகள், உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவற்றை மூட ஆணையிடப்பட்டது.

மூன்றாம் கட்டமாக நாளை மறுநாள் முதல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50% பணியாளர்கள் மட்டுமே அனுமதி, கடைகளில் நண்பகல் 12 மணி வரை மட்டுமே வணிகம் உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தக் கட்டுப்பாடுகளும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உதவாது என்பதுதான் யதார்த்தம்.

முதலில் இரு வாரங்களுக்கு ஊரடங்கை கடுமையாக நடைமுறைப்படுத்தி, பின்னர் கூடுதலாக இன்னொரு வாரம் ஊரடங்கை செயல்படுத்துவதன் மூலம், கொரோனா வைரஸ் பரவலை நிச்சயமாக கட்டுப்படுத்தி விட முடியும். ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதால் ஏழை - நடுத்தர மக்களுக்கு ஏற்படும் வாழ்வாதார இழப்புகளை அரசுதான் ஈடுகட்ட வேண்டும்.

அதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதத்திற்கு ரூ.5,000 வீதம் வாழ்வாதார உதவியும், இலவச உணவு தானியங்களும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். இதற்கான செலவில் சரி பாதியை மத்திய அரசிடம் போராடிப் பெறவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மற்றொருபுறம் மதுரை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அம்மாவட்டங்களுக்கு போதுமான ஆக்சிஜனை வழங்கி நோயாளிகளைக் காப்பாற்றவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று அறிக்கையில் பா.ம.க நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News