இரண்டு மாதங்களில் 60 யூடியூப் சேனல்கள் முடக்கம் - அதிரடி காட்டும் எல்.முருகன்
By : Mohan Raj
நாட்டின் பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் ஆபத்தை ஏற்படுத்திய 60 யூடியூப் சேனல்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
தேசத்திற்கு எதிரான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவதாக சமீப காலமாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் கடந்த மாதம் 20 யூடியூப் சேனல்களை முடக்கியது, அந்த யூடியூப் சேனல்கள் பாகிஸ்தானில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிரான பொய்யான கருத்துக்களை உருவாக்குவதால் அதனை முடக்குவதாக மத்திய தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
அதேபோல் நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என யூடியூப் நிறுவனத்தை மத்திய அரசு வலியுறுத்தியது. இந்நிலையில் மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.வேணுகோபால் அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் கூறுகையில், "நாட்டின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் ஆபத்தை ஏற்படுத்திய 60 யூடியூப் சேனல்'களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதுபோன்ற செயல்களை மத்திய அரசு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது" என தெரிவித்தார்.