தி.மு.க அரசை எதிர்த்து பா.ஜ.க 8 நாட்கள் போராட்டம் - பம்பரமாக சுழலும் அண்ணாமலை !

By : Mohan Raj
ஆளும் தி.மு.க அரசு தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத காரணத்தினால் தமிழகத்தில் தொடர்ந்து 8 நாட்கள் பா.ஜ.க சார்பில் போராட்டம் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, "தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி பெட்ரோல்,டீசல் விலையை குறைக்கவில்லை. மேலும் மத்திய மத்திய அரசு டீசலுக்கு ரூ.10-ம், பெட்ரோலுக்கு ரூ.5-ம் குறைத்து மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தை குறைத்தது. அதே சமயம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அவர்களது மாநில அளவிலான வாட் வரியை குறைத்து பெட்ரோல்-டீசல் விலையை தங்கள் பங்கிற்கு குறைத்துள்ளது.
தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் பெட்ரோல்-டீசல் விலை குறைவாக இருந்து வருகிறது. எனவே தமிழக அரசு பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க கோரியும், கேஸ் சிலிண்டர் விலையை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி சிலிண்டருக்கு ரூ.100 குறைக்க கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் 3'ம் தேதி வரை தொடர் போராட்டங்கள் நடைபெறும்.
அந்த போராட்டங்கள் விவரம் பின்வருமாறு,
இன்று (திங்கட்கிழமை) இளைஞர் அணி, மகளிர் அணி சார்பில் மாவட்ட அளவில் கண்டன ஆர்ப்பாட்டம்.
26-ந்தேதி- விவசாய அணி சார்பில் தமிழகம் முழுவதும் மாட்டு வண்டிப் பயண ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
27-ந்தேதி- சிறுபான்மையினர் அணி, வழக்கறிஞர் பிரிவு சார்பில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து நம் கோரிக்கையின் நியாயத்தை விளக்குதல்.
28-ந்தேதி- எஸ்.சி. எஸ்.டி. அணி சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முற்றுகை போராட்டம்.
30-ந்தேதி- ஓ.பி.சி. அணி, அமைப்பு சாரா தொழிலாளர்கள் பிரிவு சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்.
அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி- மகளிர் அணி சார்பில் வீடுகளின் முன்பாக கோரிக்கை அட்டையை ஏந்தும் போராட்டம்.
2-ந்தேதி- கல்வியாளர் பிரிவு சார்பில் மக்களுக்கு கோரிக்கையை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல்.
3-ந்தேதி- பிரசாரப்பிரிவு, தமிழ் வளர்ச்சி பிரிவு சார்பில் தெருமுனை கூட்டங்கள் நடத்துதல்.
இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
