சாட்டையை சுழற்றும் அ.தி.மு.க - அதிரடியாக 9 நிர்வாகிகள் நீக்கம்!

சேலம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அ.தி.மு.க நிர்வாகிகளை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்படுவதாக ஓ.பி.எஸ், இ.பி.எஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.
சசிகலாவுடன் தொலைபேசியில் பேசுபவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருவது அரங்கேறி வருகிறது. இந்நிலையில், சசிகலாவிடம் போனில் பேசிய மேலும் 9 அ.தி.மு.க நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அ.தி.மு.க வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும் கழகக் கட்டுபாய் மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், C.செல்லத்துரை (சேலம் புறநகர் மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர்), R.பாலாஜி (தங்காயூர் ஊராட்சி மன்றத் தலைவர் கொங்கணாபுரம் ஒன்றியம்), சேலம் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் (மாவட்ட மீனவர் பிரிவு முன்னாள் செயலாளர்), மீனா தியாகராஜன் (நரசிங்கபுரம் நகர கழக மாவட்ட பிரதிநிதி) தியாகராஜன் (நரசிங்கபுரம் நகர 11-வது வார்டு கழக செயலாளர்), கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த் (மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர்), வேங்கையன் (மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி இணை செயலாளர்), தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தை சேர்ந்த (ரூபன் k.வேலவன்) மாவட்ட புரட்சித் தலைவி பேரவை இணை செயலாளர், பொன்ராஜ் (விளாத்திகுளம் பேரூராட்சி புரட்சித்தலைவி பேரவை செயலாளர்) ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அ.தி.மு.க சார்பில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.