12'ம் வகுப்பு பொதுத்தேர்வு நிலை என்ன? பள்ளி கல்விதுறை அமைச்சர் பதில்!

12'ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா? என்ற கேள்விக்கு செய்தியாளர்களுக்கு பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, "கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பலர் அறிகுறி இல்லாமலேயே இருக்கின்றனர். அதையும் கருத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. முடிந்தவரை மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நல்ல முடிவு எடுக்கப்படும். பிற மாநிலங்களில் தேர்வு நடத்தப்படும் சூழலையும் ஒப்பிட்டுப் பார்க்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டுவிட்டன. ஆனால், தமிழகத்தில் சூழல் அப்படி இல்லை. செய்முறைத் தேர்வு மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. நாளை, நாளை மறுநாளும் இதுகுறித்துப் பேச உள்ளோம். கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட ஆலோசனைகளை, கருத்துகளை முதல்வரிடம் எடுத்துச் செல்ல உள்ளேன். அவர் உரிய முடிவெடுத்து அறிவிப்பார்" என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.