259ம் வாக்குறுதியை மக்கள் எதிர்த்ததன் காரணமாக தி.மு.க தேர்தல் அறிக்கை புத்தகம் விநியோகம் நிறுத்தம் - புலம்பும் மூத்த உடன்பிறப்புகள்!

ஒரு தேர்தல் அறிக்கை மக்களை கொந்தளிக்க வைத்து ஒரு கட்சியின் நிர்வாகிகளே அந்த தேர்தல் அறிக்கையை மக்களிடத்தில் விநியோகம் செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளது இந்ந 2021 சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் நடந்தேறியுள்ளது.
தி.மு.க'வின் தேர்தல் அறிக்கையில் எண் 259'ல் "அஞ்சுகம் அம்மையார் கலப்பு திருமண நிதியுதவி திட்டம்" என்ற தலைப்பில் அறிவிக்கப்பட்ட சலுகை பெண் குழந்தைகள் பெற்றெடுத்தவர்களை மிகுந்த அச்சப்படுத்தி தி.மு.க'விற்கு எதிராக கொந்தளிக்க செய்துள்ளது.
அதில், "கலப்பு திருமணங்களை ஊக்கப்படுத்தி பிறப்பு அடிப்படையிலான சாதி இன வேறுபாட்டை அகற்றிட தி.மு.க கலப்பு திருமணம் செய்து கொள்ளும் மணமக்களில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது மலைவாழ் பழங்குடியினர் எனில் அவர் பிற இனத்தவரை மணந்து கொண்டால் நிதியுதவி 60 ஆயிரம் மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்படும்" என்பதே அந்த அறிவிப்பாகும்.
இதற்கு பெண் பிள்ளைகளை பெற்றெடுத்த பிறசாதி பெற்றோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அதில் "தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்கள் மேடையில் "சாதியை ஒழித்தவர்", "சமூக நீதி காவலர்" என பெயர் வாங்குவதற்கு 20 ஆண்டுகள் நாங்கள் பார்த்து பார்த்து வளர்த்த மகளையா பலிகடா ஆக்குவது?" என்ற பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்களின் எதிர்ப்பே தி.மு.க நிர்வாகிகள் தி.மு.க தேர்தல் வாக்குறுதி அச்சடித்த புத்தகத்தை விநியோகம் செய்யாமல் இருக்க காரணமாகும்.
மேலும், சமூக வலைதளங்களில், இந்த வாக்குறுதியை கடுமையாக எதிர்த்து, பிற சமூகத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். இதையறிந்த தி.மு.க மேலிடம், பிற சமூகத்தினரின் எதிர்ப்புகளை தடுக்கும் வகையில், தேர்தல் அறிக்கை புத்தகத்தை வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய வேண்டாம் என, மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனால், தமிழகம் முழுவதும் உள்ள, மாவட்ட தி.மு.க அலுவலகங்களில், தேர்தல் அறிக்கை புத்தகம், மூட்டைகளாக கட்டி வைக்கப்பட்டுள்ளன. தி.மு.க வரலாற்றில் முதன் முறையாக, தேர்தல் அறிக்கை புத்தகம், வாக்காளர்களுக்கு வினியோகிக்கப்படாமல் உள்ளது இந்த முறைதான் என மூத்த உடன்பிறப்புகளே புலம்பி வருகின்றனர்.