"45 வருஷமா இருந்தா சீட் குடுத்துடுவோமா?" - மாற்றுதிறனாளியை ஒதுக்கிய தி.மு.க! மனம் வெறுத்து சுயேட்சையாக களம்
By : Mohan Raj
"45 வருஷமா தி.மு.க இருக்கோங்க நாங்க, ஆனா எங்களை மாற்றுத்திறனாளின்னு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கலை" என ஒரு குடும்பமே மனம் வருந்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் சுயேச்சையாக போட்டியிடுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் 36-வது வார்டு போஸ் நகரை சேர்ந்தவர் கண்ணன், 45 வருடங்களாக தி.மு.க'வின் அதி தீவிர விசுவாசி இவரின் மகன் சுப்பிரமணியன் மருமகள் சரிதா இருவரும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகள். இவர்கள் இருவரும் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக தி.மு.க'வில் இருக்கின்றனர். இந்நிலையில் 36-வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் அதில் போட்டியிட மாற்றுத்திறனாளியான சரிதா விருப்பப்பட அதற்காக 2500 ரூபாய் கட்டணமும் செலுத்தி தி.மு.க'வில் விருப்ப மனு அளித்திருக்கிறார், ஆனால் நேர்காணலில் தி.மு.க'வினர் நீங்க மாற்றுதிறனாளி எனக்கூறி சரிதாவை புறக்கணித்து விட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட செயலாளர் மற்றும் தி.மு.க'வின் முக்கிய நிர்வாகிகளை கண்ணன் சந்தித்து கெஞ்சி போட்டியிட இடம் கேட்டபோதும் அதெல்லாம் முடியாது எனக் கூறி மறுத்துள்ளனர்.
இதனால் மனம் நொந்து 36'வது வார்டில் சுயேட்சையாக களம் இறங்கியிருக்கிறார் சரிதா, மேலும் சுப்பிரமணியம், சரிதாவும் சீர்திருத்த திருமணம் செய்து கொண்டவர்கள் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். தற்பொழுது இவர்கள் குடும்பம் புடைசூழ செய்கையில் பேசி வாக்கு சேகரித்து வருகின்றனர். இதுகுறித்து சுப்பிரமணியன் சகோதரர் மணி கூறும்பொழுது, "அப்பா ரொம்ப வருஷமாவே தி.மு.க உறுப்பினராக இருக்கிறார், அண்ணி பட்டியலினத்தை சேர்ந்தவங்க. அண்ணி, அண்ணன் ரெண்டு பேரும் சமூக சீர்திருத்த கல்யாணம் பண்ணிட்டாங்க. இந்த வாட்டி போட்டியிட வாய்ப்பு கேட்டு ரொம்ப போராடுனாங்க ஆனா கடைசி வரைக்கும் போராடிப் பார்த்து எங்கள் தி.மு.க புறக்கணிடுச்சு. மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடலாம் என்று அரசாணை இருக்கு ஆனா தி.மு.க யாரும் அதை மதிக்க கூட இல்லை ஏதோ எங்க வார்டுக்கு ஏதாவது செய்யணும்னு தோணுது அதனால நாங்க சுயேச்சையாக போட்டியிடுறோம். கண்டிப்பா வெற்றி பெறுவோம்" என நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.