₹97 நெருங்கும் பெட்ரோல் - தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறிய ₹5 விலை குறைப்பு எங்கே?

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளதால் தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹5 டீசல் விலை லிட்டருக்கு ₹4 எப்பொழுது குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் நிலவி வருகிறது.
கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு, பெட்ரோல், டீசல் விலை பயணித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ₹96-ஐ கடந்தும், டீசல் கடந்த 1-ந்தேதி ₹90-ஐ கடந்தும் விற்பனை ஆனது. அதன் தொடர்ச்சியாக விலை ஏறுமுகத்திலேயே இருந்து வந்தது. நேற்றும் விலை அதிகரித்து காணப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் ₹96 ரூபாய் 23 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல், நேற்று லிட்டருக்கு 24 காசு உயர்ந்து, ₹96 47 காசுக்கு விற்பனை ஆனது.
அதேபோல், டீசல் விலையை பொறுத்தவரையில் நேற்று முன்தினம் ₹90 38 காசுக்கு விற்பனையானது. நேற்று லிட்டருக்கு 28 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் ₹90 ரூபாய் 66 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.
தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாத காலம் ஆன நிலையில் அதன் தேர்தல் அறிக்கையில் கூறியபடி "பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹5, டீசல் விலை லிட்டருக்கு ₹4 குறைக்கப்படும்" என்ற அறிவிப்பை நிறைவேற்றினால் ஊரடங்கால் போதிய வருமானமின்றி தவிக்கும் மக்களுக்கும், இதர பொருள்களின் விலைவாசி ஏற்றத்திற்கும் உள்ள மக்களின் சுமையை குறைக்க பெரிதும் உதவும் என மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.