Kathir News
Begin typing your search above and press return to search.

தேர்தல் வாக்குறுதியில் அளித்த விடியல் எங்கே.? தி.மு.க. அரசுக்கு எதிராக போராட்டத்திற்கு நாள் குறித்த அ.தி.மு.க.!

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின், தங்கை கனிமொழியும், மாமன் மகன் தயாநிதியும், தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று ஊரெங்கும் பிரச்சாரம் செய்தார்கள்.

தேர்தல் வாக்குறுதியில் அளித்த விடியல் எங்கே.? தி.மு.க. அரசுக்கு எதிராக போராட்டத்திற்கு நாள் குறித்த அ.தி.மு.க.!
X

ThangaveluBy : Thangavelu

  |  23 July 2021 9:30 AM GMT

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின், தங்கை கனிமொழியும், மாமன் மகன் தயாநிதியும், தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று ஊரெங்கும் பிரச்சாரம் செய்தார்கள்.


நீட் தேர்வை ரத்து செய்வது என்ற சூத்திரம் தங்களுக்கு மட்டுமே தெரியும் என்று சத்தியம் செய்தார்கள். அவர்கள் மட்டுடமல்லாமல் திமுகவின் மூத்த தலைவர்களும், பிரச்சார வியூக ஆலோசகரின் அறிவுரையின்படி தயாரான தேர்தல் அறிக்கையும் நீட் தேர்வு ரத்து செய்யப்படுவது உறுதி, உறுதி, உறுதியோ உறுதி என்று ஒவ்வொரு கூட்டத்திலும் முழங்கியதைக் கேட்டு சரி, ஏதோ செய்வார்கள் போலிருக்கிறது என்று தமிழ்நாட்டு வாக்காளர்கள் நம்பி வாக்களித்தார்கள். சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைந்திருக்கும் திமுக.


இப்போது நீட் தேர்வுக்கு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு, நீட் தேர்வுக்கு தயாராகும்படி மாணவர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது. எத்தனை பெரிய நம்பிக்கை துரோகத்தை தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இழைத்திருக்கிறது திமுகவும், அது அமைத்திருக்கும் அரசும்!


தங்களுக்கு மட்டுமே தெரிந்த வல்லமையையும் சூத்திரத்தையும் பயன்படுத்தி திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறது. மக்களின் இந்த எதிர்பார்ப்பை உடனடியாக நிறைவேற்றும் வகையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டு மாணவர்கள் அவர்தம் பெற்றோர்கள் சார்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.


எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான பொருட்களின் விலையும் கட்டுமான பொருட்களின் விலையும் உயர்வது வாடிக்கையாகிவிட்டது.

பொருளாதாரமும் புரியாமல் மக்களின் துன்ப துயரங்களும் தெரியாமல் மனம் போனபடி திமுக செயல்படுவதுதான் இந்த அவல நிலைக்கு காரணம். கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து வருமானம் கருகிப் போய் அல்லல்படும் மக்களின் துயரத்தை போக்க திமுக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தங்களுடைய ஆட்சி அமைந்தவுடன் பெட்ரோல் விலையை 5 ரூபாயும் டீசல் விலையை 4 ரூபாயும் குறைப்பதாகவும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ 100 ரூபாய் மானியம் தருவதாகவும் வாக்களித்து திமுக இதுவரை தனது வாக்குறுதியை பற்றி வாய் திறக்காமல் இருக்கிறது.


நூற்றுக்கணக்கான வாக்குறுதிகளை தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டு பெண்களுக்கு அளித்தது திமுக அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான் நாணயமான செயல். அதுவே அரசியலின் நாகரீகமும் கூட. மாறாக திமுக அவற்றைப் பற்றி பேசாமல் அணில் ஓடுவதால் மின்சாரம் தடைபடுகிறது என்று கூச்சமின்றி பேசுகிறது. தமிழ்நாடெங்கும் பலமுறை மின்வெட்டு நாள்தோறும் நடைபெறுகிறது. தமிழ் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பது விவசாயம். விவசாய பெருங்குடி மக்களுக்கு எண்ணற்ற வாக்குறுதிகளை தனது தேர்தல் அறிக்கையில் திமுக கூறியுள்ளது. ஆனால் அவற்றில் ஒன்றைக் கூட இன்றுவரை நிறைவேற்றவில்லை. விதை வித்துக்கள் உரம் போன்ற இடுபொருள்கள் தங்குதடையின்றி கிடைத்துவிடும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். இதுவரை எதையும் செய்திராத திமுக அரசின் மெத்தன போக்கும் அலட்சியமும் பெரும் பொருளாதார சீர்குலைவிலும் கிராம ஏழ்மையிலும் கொண்டுபோய்விடும் என்று எச்சரிக்கிறோம்.


ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சி செய்திகளில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்துவிடும் அரும்பாடுபட்டு அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் தன் உழைப்பின் கனியான நெல்மணிகள் அழுகிப் போவது கண்டு அழுது துடிப்பதையும் காணும்போது தாங்க முடியாத துக்கமும் சுகமும் காண்போருக்கு எழுகிறது. முறைகேடுகளும் லஞ்ச லாவண்யம் இல்லாமல் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு அம்மா அவர்கள் தான் முழு முதற்காரணம். திமுகவின் கடந்த கால ஆட்சியின் போது கர்நாடகத்தில் பலமுறை புதிய அணைகள் கட்ட பட்டதையும் அதனால் தமிழகத்திற்கு இயற்கையாக காவிரியில் வந்திருக்க வேண்டிய தண்ணீரின் அளவு பெருமளவில் குறைந்து போனதையும் வரலாற்றின் பக்கங்களில் பார்க்க முடிகிறது.


வட தமிழகத்தின் நீர் ஆதாரங்களில் முக்கியமானதாக தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே பெரிய அணையை தற்போது கர்நாடகம் கட்டி இருக்கிறது. அது பற்றி திமுக அரசு வாய் திறக்க மறுக்கிறது. காவிரியில் ஒரு சொட்டு நீர் கூட வர முடியாத அளவுக்கு மேகதாது என்ற இடத்தில் பிரம்மாண்டமான அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இப்போதாவது திமுக அரசு விழிப்புடனும் முனைப்புடன் செயல்பட்டு புதிய அணைகள் கட்டுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக கழகத்தினர் மீது திமுக அரசு பொய் வழக்கு போடும் மலிவான அரசியல் ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறது. அதிமுகவை அழித்து விடலாம் ஒழித்துவிடலாம் என்று கனவு கண்டால் அது பகல் கனவாகவே முடியும். ஆகவே பிற்போக்குத் தனத்தை கைவிட்டு நேர்மையாகவும் திறமையாகவும் ஆட்சி செய்ய முன் வரட்டும்.

திமுக அரசின் மெத்தன போக்கை களையவும் அக்கறையுடன் மக்கள் குரலுக்கு செவி சாய்க்க செய்யவும் வருகிற 28.7.2021 அன்று காலை 10 மணி அளவில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி ஆகிய பகுதிகளில் தங்கள் வீடுகளின் முன்னே பதாகைகளை ஏந்தி கவனயீர்ப்பு முழக்கங்களை எழுப்பி தமிழ்நாட்டு மக்களின் குரல்கள் ஒலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி ஒன்று கூடி குரல் எழுப்புவோம். அது ஆளுவோரின் செவிப்பறையை சென்று சேரட்டும்.

நாம் வாழ்வதெல்லாம் மக்களுக்காகவே!

நம் முழக்கமெல்லாம் எல்லோரும் எல்லாமும் பெறுவதற்காகவே!

இவ்வாறு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News