Kathir News
Begin typing your search above and press return to search.

போலியான வாக்குறுதியால் வெற்றி பெற்ற தி.மு.க. அரசை கண்டித்து மாபெரும் போராட்டம் ! - அ.தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம்!

சென்னை அதிமுக எம்.ஜி.ஆர். மாளிகையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினர். இதில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

போலியான வாக்குறுதியால் வெற்றி பெற்ற தி.மு.க. அரசை கண்டித்து மாபெரும் போராட்டம் ! - அ.தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம்!

ThangaveluBy : Thangavelu

  |  1 Dec 2021 8:36 AM GMT

சென்னை அதிமுக எம்.ஜி.ஆர். மாளிகையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினர். இதில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர். கண்ட மகத்தான மக்கள் இயக்கமாம் அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டங்களை நாடு, நகரங்கள் மற்றும் பட்டி, தொட்டியெங்கும் எழுச்சியுடன் கொண்டாடுவதற்கு கழக உடன்பிறப்புகளுக்கு அன்பு அழைப்பு விடுப்பது.


நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில், அ.தி.மு.க. 66 இடங்களையும், கழக கூட்டணிக் கட்சிகள் 9 இடங்களையும், ஆக மொத்தம் 75 இடங்களில் வெற்றி பெறும் வகையில் உழைத்திட்ட, கழக முன்னணியினருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் பாராட்டுக்கள். கழகத்தோடு இணைந்து தேர்தல் பணியாற்றிய கூட்டணிக் கட்சியினருக்கும், தோழமை கட்சியினருக்கும், இயன்ற வகைகளில் எல்லாம் உடன் உழைத்த, உதவிய பல்வேறு இயக்கங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி தெரிவிப்பது.

சட்டமன்றப் தேர்தலில் பல்வேறு போலியான வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு அளித்து, ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கும் தி.மு.க.வின் நேர்மையற்ற பிரச்சார முறைகளுக்குக் கண்டனம் தெரிவிப்பது.

ஏழை, எளிய உழைக்கும் மக்கள், பெண்கள் மற்றும் மாணவர்கள் நலன் குறித்த வாக்குறுதிகளை உறுதியாய் நிறைவேற்றுவதாகக் கூறிய தி.மு.க. அந்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றவும், அந்த வாக்குறுதிகள் எப்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் என்பதை கால அட்டவணை மூலம் உடனடியாகத் தெரிவிக்க வற்புறுத்தியும்; அவ்வாறு தெரிவிக்காவிடில் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த நாள் முதல், தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் குற்றச்செயல்கள்; கொலை, கொள்ளைகள்; வழிப்பறி சம்பவங்கள்; போலீசாருக்கே பாதுகாப்பற்ற நிலை; வணிகர்கள் மீதான தாக்குதல்கள்; பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் உள்ளிட்ட அச்சமூட்டும் அடாவடி செயல்களை அறவே ஒழிக்க தி.மு.க. அரசு முன்வர வேண்டும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் தோல்வி அடைந்திருக்கும் தி.மு.க. அரசுக்குக் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம்.

வடகிழக்கு பருவமழையால் தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதன் காரணமாகவும்; வாழை, மரவள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம், கம்பு உள்ளிட்ட பிற பயிர் வகைகளும் பெருமளவு பாதிப்படைந்துள்ளதன் காரணமாகவும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள விவசாயிகளுக்கும்; மழை வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ள வீடுகள் மற்றும் உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கும், உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கிட தி.மு.க. அரசை வலியுறுத்தல். மழை வெள்ள பாதிப்புகளை முன் ஏற்பாடுகள் மூலம் தடுக்கத் தவறிய தி.மு.க. அரசுக்குக் கண்டனம் தெரிவிப்பதுடன் மழை, வெள்ள நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொண்டு, மக்களின் துயர்துடைக்க திமுக அரசு விரைந்து செயல்பட வலியுறுத்துகிறோம்.

நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில், ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைக்கும் வகையில் அராஜகத்தைக் கட்டவிழ்த்து விட்டும், பல்வேறு முறைகேடுகளை அரங்கேற்றியும் வெற்றி பெற்றிருக்கும் தி.மு.க.வுக்குக் கண்டனம்.

விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில், அ.தி.மு.க. உடன்பிறப்புகள் கடுமையாக உழைக்கவும்; தி.மு.க.வின் முறைகேடுகளைத் தடுக்கத் தேவையான முன் ஏற்பாடுகளைச் செய்யவும் அறிவுறுத்துதல். எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோர் வழியில் அ.தி.மு.க.வை கட்டிக்காத்து, ஒற்றுமை பேணி, எதிர்கால தேர்தல்களில் மாபெரும் வெற்றிபெற, கழக முன்னோடிகளின் கரங்களை வலுப்படுத்துவோம் என்பன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News