முதன் முறையாக அண்ணாமலையை பற்றி பேசிய முதல்வர் ஸ்டாலின் - தி.மு.க'விற்கு குடைச்சல் அதிகமான காரணமா?
"அண்ணாமலை அரசியல் செய்கிறார், நாங்கள் நல்லது செய்கிறோம்" என முதல்வர் ஸ்டாலின் முதன்முறையாக அண்ணாமலையை பற்றி பேசியுள்ளார்.
By : Mohan Raj
"அண்ணாமலை அரசியல் செய்கிறார், நாங்கள் நல்லது செய்கிறோம்" என முதல்வர் ஸ்டாலின் முதன்முறையாக அண்ணாமலையை பற்றி பேசியுள்ளார்.
நேற்று தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பெட்ரோல், டீசல் விலையை குறைக்காததை கண்டித்து தமிழக பா.ஜ.க சார்பில் அண்ணாமலை தலைமையில் சென்னையில் மிகப் பெரும் பேரணி நடைபெற்றது. அந்த சமயம் டெல்டா மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஸ்டாலின் பயணத்தை குறிப்பிட்டு, 'இங்கே அரசை கண்டித்து பா.ஜ.க சென்னையில் பேரணி நடத்தும் காரணத்தினால்தான் டெல்டா மாவட்டங்களுக்கு முதல்வர் எஸ்கேப் ஆகிவிட்டார்' என குறிப்பிட்டிருந்தார் அண்ணாமலை.
இதனைத் தொடர்ந்து நேற்று மாலை டெல்டா மாவட்ட சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு திருச்சி விமான நிலையத்திற்கு வந்த முதல்வர் விமான நிலையத்தில் உள்ள கூட்ட அரங்கில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் கூறுகையில், 'நான் டெல்டா மாவட்டத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக வந்தேன்' என்றார்.
மேலும் அண்ணாமலை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், 'அண்ணாமலை அரசியல் செய்கிறார், நாங்கள் மக்களுக்கு நல்லது செய்கிறோம்' என சுருக்கமான பதிலோடு முடித்துக்கொண்டார்.
அண்ணாமலை அரசியலுக்கு வந்த இரண்டு வருடங்களில் கூட முடியாத நிலையில் நிறைய போராட்டங்கள், தி.மு.க மீது விமர்சனங்கள் வைத்துள்ளார். ஆனால் இதுவரை அண்ணாமலையை பற்றி முதல்வர் கருத்து கூறியதே இல்லை. தற்போது அண்ணாமலை அதிகமாக களத்தில் இறங்கி போராடும் காரணத்தினால் முதன்முறையாக முதல்வர் ஸ்டாலின் அண்ணாமலையை பற்றி வாயைத் திறந்து பேசியுள்ளார்.