கிருஷ்ணகுமார் முருகன் மீது தி.மு.க அரசு தொடுத்த வழக்கு - கைது நடவடிக்கையின் பின்னணி என்ன?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி ஒட்டியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
By : Karthiga
வடசென்னை பகுதிகளில் கடந்த 11-ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டல உதவி என்ஜினீயர் ராஜ்குமார், சுவரொட்டியை ஒட்டிய பிலிப் ராஜ் என்பவரை விசாரித்தார். அதில் சுவரொட்டி ஒட்டிய விவகாரம் பற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது, இது பற்றி துறைமுகம் கிழக்கு பகுதி தி.மு.க செயலாளர் ராஜசேகரும் புகார் அளித்ததாக கூறி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் சுவரொட்டி ஒட்டிய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிலிப்ராஜ் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவரிடமிருந்து ஆயிரக்கணக்கான சுவரொட்டிகள் மற்றும் இதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் , செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அவருக்கு சத்யநாதன் என்பவர் தான் அந்த சுவரொட்டிகளை கொடுத்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், சிவகாசியில் உள்ள தனியார் அச்சகத்தில் 5000 சுவரொட்டிகளை அச்சடித்து கூரியர் தபால் மூலம் சென்னை கொண்டு வந்து பிலிப்ராஜை வைத்து சென்னையில் ஒட்டியது தெரிய வந்தது.
போலீசாரின் தொடர்விசாரணையில் இந்த விவகாரத்தில் கிருஷ்ணகுமார் என்பவருக்கும் தொடர்பு தொடர்பு இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்த வழக்கில் பிலிப்ராஜ் சத்யநாதன் உட்பட மூன்று பேரை கைது செய்த போலீசார் கிருஷ்ண குமாரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.