எதிர்க்கட்சியாக இருக்கும்போது 1 கோடி.. ஆளுங்கட்சியானதும் 25 லட்சமா.. முதல்வர் மு.க.ஸ்டாலினை விளாசிய பா.ஜ.க. தலைவர் எல்.முருகன்.!
‘‘எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது மாற்றிப் பேசுவது அழகல்ல.. முதலமைச்சர் தனது வாக்குப்படி, உயிரிழந்த பணியாளர் குடும்பங்களுக்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

''எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது மாற்றிப் பேசுவது அழகல்ல.. முதலமைச்சர் தனது வாக்குப்படி, உயிரிழந்த பணியாளர் குடும்பங்களுக்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்'' என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது பற்றி இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த குடும்பத்திற்கு ஸ்டாலின் ரூ.25 லட்சம் அறிவித்துள்ளார். கடந்த ஆட்சியிலும் இதே ரூபாய் 25 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
தற்போது ஏதோ உயர்த்தி இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உண்டாக்கியிருப்பது ஏமாற்றம் அளிப்பதோடு அதிர்ச்சியையும் அளிக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி திமுக உள்ளிட்ட 11 கட்சிகளின் கூட்டணியினர் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம், ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தமிழக அரசு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போன்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி அன்று அதிமுக அரசு, கொரோனா தடுப்புப் பணியில் உயிரிழக்கும் முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடாக கொடுக்கப்படும் என்று அறிவிப்பு செய்தது.
அப்போது கடுமையாக எதிர்த்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஏப்ரல் 2020 அன்று அறிவித்திருந்தபடி ரூபாய் 50 லட்சத்திலிருந்து ரூபாய் 25 லட்சம் வரை குறைத்துக் கொடுப்பதை கடுமையாக ஆட்சேபித்து ரூ 50 லட்சம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்" - குறள்
என்ற திருவள்ளுவரின் குரலுக்கு ஏற்ப எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது மாற்றிப் பேசுவது அழகல்ல. ஆகவே, உடனடியாக முதலமைச்சர் தன் வாக்குப்படி உயிரிழந்த பணியாளர் குடும்பங்களுக்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க உத்தரவிடக் கேட்டுக் கொள்கிறேன்". இவ்வாறு பாஜக தலைவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.