கருப்பு பணம் வைத்துள்ளவர்கள் ஐடி ரெய்டுக்கு கவலைப்படனும்: பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி விளக்கம்.!
திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தினர்.
தமிழகத்தில் வருகின்ற 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனிடையே பல்வேறு அரசியல் கட்சியினருக்கு சொந்தமான இடங்களிலும், வேட்பாளர்கள் வீடுகளிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே போன்று திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அது தொடர்பாக பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறும்போது, தோல்வி பயத்தால் பாஜகவை தூண்டிவிட்டு வருமானவரித்துறை சோதனை நடைபெறுகிறது என்று கூறினார்.
இந்நிலையில், துரைமுருகனுக்கு பதிலளிக்கும் விதமாக தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி ரவி கூறுகையில், ''வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே சோதனை நடத்துகிறார்கள்.
யார் கருப்புப் பணம் வைத்துள்ளார்களோ அவர்கள்தான் வருமானவரி சோதனைப்பற்றி கவலைப்பட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.