Kathir News
Begin typing your search above and press return to search.

"எல்லாரும் கலைஞர் ஆகிவிட முடியுமா? ஒரு நாளும் ஸ்டாலின் முதல்வர் ஆகவே முடியாது" - மதுரையில் வெடித்த மு.க.அழகிரி!

"எல்லாரும் கலைஞர் ஆகிவிட முடியுமா? ஒரு நாளும் ஸ்டாலின் முதல்வர் ஆகவே முடியாது" - மதுரையில் வெடித்த மு.க.அழகிரி!

எல்லாரும் கலைஞர் ஆகிவிட முடியுமா? ஒரு நாளும் ஸ்டாலின் முதல்வர் ஆகவே முடியாது - மதுரையில் வெடித்த மு.க.அழகிரி!

Mohan RajBy : Mohan Raj

  |  3 Jan 2021 8:57 PM GMT

ஸ்டாலின் முதல்வராக முடியாது மு.க.அழகிரி ஆவேசமாக கூறியுள்ளார்.

கருணாநிதியின் மூத்த மகனும் தற்போதைய தி.மு.க தலைவர் ஸ்டாலினின் அண்ணனுமாகிய மு.க.அழகிரி தி.மு.க-வின் முன்னாள் எம்.பி-யாகவும், தென்மண்டல அமைப்பு செயலாளராகவும் கருணாநிதி காலத்தில் கெத்தாக வலம் வந்தவர். இன்னும் கூற போனால் தி.மு.க-வில் ஸ்டாலினை விட அதிக திறம் மிக்கவரும், செல்வாக்கு மிகுந்தவருமாவார். ஆனால், சில உள்ளடி வேலைகளால் "தி.மு.க-வில் இருந்து நீக்கப்படுவதாக" கருணாநிதியால் அறிவிக்கப்பட்டு சில காலம் அரசியலை விட்டு விலகி இருந்தார். இந்த நிலையில் மீண்டும் தனது அரசியல் பிரவேசம் பற்றி அறிவிக்க போவதாக இன்று தனது ஆதரவாளர்களின் கூட்டத்தை மதுரையில் கூட்டினார். அதில் சில முக்கிய விஷயங்களையும் தனது ஆதரவாளர்களுக்கான "தன் நிலைப்பாடு" பற்றியும் அறிவிப்பை வெளியிட்டார்.

அதில் அவர் கூறியதாவது, "பல நேரங்களில் பல சோதனைகள் நேரலாம், அதை கடந்து வந்திருக்கிறோம்.நான் எப்போதும் உங்களில் ஒருவன்" என தன் தொண்டர்களுக்கு உற்சாகமளித்தார்.

பின் தி.மு.க-வை பற்றி பேசிய அவர், "தி.மு.க-வை விட்டு வைகோ வெளியேறிய போது ஒரு தி.மு.க தொண்டன் கூட வெளியேறவில்லை. திருமங்கலம் இடைத்தேர்தல் வெற்றியை இந்தியாவே உற்று நோக்கியது, திருமங்கலம் இடைத்தேர்தலில் முதலில் பணி செய்ய விரும்பவில்லை, கலைஞர் வலியுறுத்தியதால் தேர்தல் பணி செய்தேன். திருமங்கலம் இடைத்தேர்தல் ஃபார்முலா என்கிறார்கள், ஆனால் அப்படி ஒரு ஃபார்முலா கிடையாது" என்றார்.

மேலும் பேசிய அவர், "திருச்செந்தூர் தொகுதியிலும் கொடுத்த வாக்குறுதியை போலவே வெற்றி பெற்று காட்டினேன். தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை வற்புறுத்தி கொடுத்ததால் ஏற்றுக்கொண்டேன். மத்திய அமைச்சர் பதவி தேவையில்லை என்று கூறினேன், கலைஞர்தான் வலுக்கட்டாயமாக கொடுத்தார்" என பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

மேலும், "திருமங்கலம் தேர்தலில் ஜெயிக்காமல் இருந்திருந்தால் அப்போது தி.மு.க-வின் ஆட்சி கேள்விக்குறியாகி இருக்கும்" என்ற உண்மையை கூறினார்.

மேலும் ஸ்டாலினின் நினைவுகளை பற்றியும், அவர் தி.மு.க தலைவரான நிகழ்வையும் கூறிய மு.க.அழகிரி, "கலைஞருக்கு பிறகு தி.மு.க தலைவராக ஸ்டாலின் தொடர வேண்டும் என ஸ்டாலினிடமே கூறினேன். தி.மு.க-வின் எதிர்காலம் நீங்கள்தான் என ஸ்டாலினிடம் நேரிலேயே கூறினேன் அப்பாவிற்கு பிறகு நீங்கள்தான் தி.மு.க-வின் தலைவர் என கூறினேன். தி.மு.க தலைவராக உள்ள ஸ்டாலின் ஏன் எனக்கு துரோகம் செய்தார் என எனக்கு தெரியவில்லை, ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவியை தர கலைஞர் என்னுடன் ஆலோசித்த போது தாராளமாகக் கொடுங்கள்" என்று கூறினேன் என நடந்தவற்றை கூறினார்.

மேலும், "தி.மு.க-விற்காக உழைத்த என்னை ஏன் கட்சியில் இருந்து நீக்கினார்கள் என எனக்கு தெரியவில்லை. தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு எப்போது கட்சியில் சேர்ப்பீர்கள் என கலைஞரிடம் கேட்டேன், இவர்களின் ஆட்டம் அடங்கட்டும் , பொறுத்திரு என்று கூறினார்" என்று கருணாநிதியின் மனகுமுறலை பற்றி பேசினார் மு.க.அழகிரி.

மேலும் ஸ்டாலினின் முதல்வர் கனவை பற்றி பேசிய மு.க.அழகிரி, "தி.மு.க தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது. தி.மு.க-வின் அடுத்த தலைவர் நீங்கள்தான் என ஸ்டாலினிடம் கூறியது அவரது மனசாட்சிக்கு தெரியும். கலைஞரைப் போல இன்னொருவர் பிறக்க முடியாது கலைஞரையே மறந்துவிட்டு தற்போது கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கலைஞரின் பேச்சு, எழுத்து, அவரது அரசியல் சாதுரியம் யாருக்கும் கிடையாது" என ஸ்டாலின் முதல்வர் ஆசை நிறைவேற வாய்ப்பில்லை என கூறினார்.

மேலும் தன் அரசியல் நிலைப்பாடு பற்றி கூறிய அழகிரி, "எதையும் சந்திக்க தயாராக இருக்குமாறு ஆதரவாளர்களை கேட்டுக்கொள்கிறேன், நான் எனது முடிவை விரைவில் அறிவிப்பேன் , நான் எந்த முடிவை அறிவித்தாலும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என பேசினார்.

ஏற்கனவே செல்லும் இடமெல்லாம் தி.மு.க அசிங்கப்படும் இந்த நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் சொந்த அண்ணனே "இனி ஸ்டாலின் முதல்வராவது சாத்தியமே இல்லை" என கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News