'முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரிகள் வெளியில் இல்லை, அவங்க ஆட்களே போதும்' - யாரை குறிப்பிடுகிறார் வானதி சீனிவாசன்?
'தி.மு.க அரசை பொறுத்தவரை மக்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்து வருகிறது' என பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
By : Mohan Raj
'தி.மு.க அரசை பொறுத்தவரை மக்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்து வருகிறது' என பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மே 7ஆம் தேதியான இன்றுடன் தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கருத்து கூறியதாவது, 'முதலமைச்சர் ஸ்டாலினை பொருத்தவரை ஆட்சிப் பொறுப்பேற்ற ஆரம்ப நாட்களில் மிக சிறப்பாக செயல்பட்டார், கொரோனா பரவல் தடுப்பு பணிகளில் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்ட விதம் பாராட்டுக்குரியது. இதேபோல் வெற்று புகழாரங்கள் வேண்டாம் என தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் அவர் கடிவாளம் போட்டு வைத்திருப்பது நல்ல விஷயமாக பார்க்கிறேன்.
ஆனால் இப்பொழுது குறிப்பாக கடந்த மூன்று மாதங்களாக முதலமைச்சர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இருந்த அதிகாரிகளும் அமைச்சர்களும் விலகி செயல்பட தொடங்கி இருக்கிறார்களா என்ற ஐயம் எழுந்துள்ளது! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வெளியில் எல்லாம் எதிரிகள் இல்லை தி.மு.க'வைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளை போதும் ஸ்டாலின் பெயரை கெடுப்பதற்கு அந்தளவுக்கு அவர்களின் செயல்பாடுகள் இருப்பதை காணமுடிகிறது.
தி.மு.க கவுன்சிலர்கள் பல இடங்களில் அராஜகங்கள் செய்யத் துவங்கி விட்டனர் இதேபோல் அமைச்சர்கள் சிலர் தங்கள் குடும்ப உறுப்பினர்களை வைத்து பேரம் பேசுவது உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றன இதையெல்லாம் போகிற போக்கில் நான் சொல்லவில்லை நானே நேரடியாக பார்த்து மிரட்டல் பாதிக்கப்பட்டவர்கள் அந்த புகாரின் அடிப்படையில் சொல்கிறேன்.
அமைச்சர்கள் பணம் சம்பாதிக்க தொடங்கி விட்டார்கள் என்ற தகவல் எங்களுக்கு உறுதியாக வந்து கொண்டிருக்கிறது, இன்னொரு விஷயத்தை நான் குறிப்பிடுகிறேன் அதாவது மண் அள்ளுவது உள்ளிட்ட எந்த தொழிலாக இருந்தாலும் என்னதான் அரசாங்க அனுமதி கிடைத்து இருந்தாலும் உள்ளூர் தி.மு.க நிர்வாகிகளும் அனுமதி பெற வேண்டிய அவலமும் அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளதாக தொடர்ச்சியாக எங்களுக்கு புகார் வந்த வண்ணம் உள்ளன. அதனால் நல்லாட்சியை கொடுக்கும் முனைப்பு காட்ட முதலமைச்சர் ஸ்டாலின் இதையெல்லாம் கருத்தில்கொண்டு அவர்களை கட்டுப்படுத்த வேண்டும்.
எப்பொழுது பார்த்தாலும் மத்திய அரசை குற்றம் சாட்டி மத்திய அரசுக்கு எதிராக அரசியல் செய்யும் போக்கை தி.மு.க அரசு கடைபிடித்து வருகிறது இது நல்ல ஆட்சிக்கு அழகல்ல, இந்த வருடம் மற்றும் 24 சதவீதம் கூடுதலாக தமிழக அரசுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி கொடுத்துள்ளது. தடுப்பூசி மட்டுமல்ல விவகாரங்களிலும் மத்திய அரசு எந்தவித பாரபட்சமும் காட்டாமல் தமிழகத்திற்கு உதவி வருகிறது. தமிழகத்தில் ஒரு பிரச்சினை ஏற்பட்டால் அதனை உடனே திசைதிருப்பும் வகையில் மத்திய அரசை தொடர்புபடுத்தி பிரதமருக்கு எதிராக தீர்மானம் போட்டு உள்ளூர் பிரச்சினையை மறைக்க முதல்வர் ஸ்டாலின் முயற்சிக்கிறார் இதை அவரிடம் உள்ள பெரிய குறையாகும்' என்றார் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்.