கருவாடு மீன் ஆனாலும், சசிகலா அ.தி.மு.க.வின் உறுப்பினராக முடியாது: சி.வி.சண்முகம்.!
கருவாடு மீன் ஆனாலும், சசிகலா அதிமுகவின் உறுப்பினராக ஒருபோதும் ஆக முடியாது என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்பான பேட்டி அளித்துள்ளார்.
By : Thangavelu
கருவாடு மீன் ஆனாலும், சசிகலா அதிமுகவின் உறுப்பினராக ஒருபோதும் ஆக முடியாது என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்பான பேட்டி அளித்துள்ளார்.
விழுப்புரத்தில் அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டம் நடைபெற்றத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் அளித்துள்ள பேட்டியில், கொரோனா தொற்று முதல் அலையின்போது அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள், தற்போது திமுக ஆட்சியில் எதுவும் எடுக்கப்படவில்லை.
கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையை குறைத்துக் கூறுவதாக பல இடங்களில் குற்றச்சாட்டு எழுகிறது. மேலும், மருத்துவமனைகளில் உள்ள மக்களுக்கு தரமான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை அரசு ஏற்படுத்த வேண்டும்.
இதன் பின்னர் சசிகலா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு அவர் பேசும்போது, ''சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டுக்கும், அவருக்கும் உதவியாளராக இருந்தவர் அவ்வளவுதான்.
அவர் அதிமுகவை அடைவதற்கு அவர் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. கருவாடு மீன் ஆகலாம், ஆனா சசிகலாவால் அதிமுகவின் உறுப்பினராக முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.