Kathir News
Begin typing your search above and press return to search.

முதலமைச்சர் தாயார் மட்டுமின்றி, அனைத்து பெண்களையும் இழிவுபடுத்தும் தி.மு.க. ராசாவுக்கு டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்.!

அதிலும் நேற்றைய தினம் திமுக துணை பொதுச்செயலாளர் ராசா பேசிய பேச்சு மிகவும் கண்டனத்துக்குரிய விஷமாக உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தாயார் தவசியம்மாள் குறித்து மிகவும் கீழ்த்தரமான முறையில் பேசினார்.

முதலமைச்சர் தாயார் மட்டுமின்றி, அனைத்து பெண்களையும் இழிவுபடுத்தும் தி.மு.க. ராசாவுக்கு டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  27 March 2021 4:32 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக மிகவும் தரம் தாழ்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. திமுகவின் பேச்சாளர்கள் முதல் நிர்வாகிகள் அனைவரும் பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசி வருகின்றனர்.

அதிலும் நேற்றைய தினம் திமுக துணை பொதுச்செயலாளர் ராசா பேசிய பேச்சு மிகவும் கண்டனத்துக்குரிய விஷமாக உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தாயார் தவசியம்மாள் குறித்து மிகவும் கீழ்த்தரமான முறையில் பேசினார். ராசாவின் பேச்சுக்கு பாஜக, பாமக, உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.





இந்நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களையும் ஒப்பீடு செய்யும் வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. இராசா தெரிவித்துள்ள கருத்துகள் மிகவும் அருவருக்கத்தக்கவை. தந்தைப் பெரியாரின் திருவுருவப் படத்தை பின்னணியில் வைத்துக் கொண்டு பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் பேசப்பட்ட பேச்சுகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை.

அரசியல் கட்சிகளின் மக்கள்நலப் பணிகளை மக்கள் எடை போடுவதற்கான களம் தேர்தல்கள் தான். அத்தகையத் தேர்தல்களில் ஒவ்வொரு கட்சியும் தங்களின் சாதனைகளையும், எதிர்க்கட்சிகளின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையிலான குறைகளையும் மக்கள் மன்றத்தின் முன் வைத்து அவர்களின் ஆதரவைத் திரட்டுவது தான் அறமாக இருக்கும். அது தான் நாகரீகமும் ஆகும்.




ஆனால், 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது தனிநபர் தாக்குதல்களையே திமுக தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. சசிகலாவையும், முதலமைச்சரையும் இழிவுபடுத்தும் வகையில் அருவருக்கத்தக்க ஒரு கருத்தைக் கூறி திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தான் இந்த பரப்புரையில் இத்தகைய அணுகுமுறையை தொடங்கி வைத்தார்.

அவரைத் தொடர்ந்து ''முதலமைச்சர் தரையில் ஊர்ந்து சென்றவர்'', ''முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் மதிப்பு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அணிந்துள்ள காலனியின் மதிப்பை விட ஒரு ரூபாய் குறைவு'', ''முந்தா நாள் வரை வெல்லமண்டியில் வேலை செய்து வந்த எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலினுக்கு ஈடாக முடியாது'' என்றெல்லாம் அருவருப்பாக விமர்சித்து வந்த திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, அதன் உச்சமாக முதலமைச்சரின் பிறப்பையும், வழிபடத்தக்க வகையில் வாழ்ந்து மறைந்து அவரது தாயார் தவசாயி அம்மாளையும் இழிவுபடுத்தும் வகையில் வார்த்தைகளைக் கொட்டியிருக்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.




அரசியல் வரலாற்றிலும், பயணத்திலும் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிச்சாமி எந்த வகையிலும் குறைந்தவர் அல்ல. இன்னும் கேட்டால் திமுக தலைவருக்கு மகனாக பிறந்து அக்கட்சியின் தலைவராக முடிசூட்டப்பட்ட ஸ்டாலினுடன் ஒப்பிடும் போது, அதிமுகவில் கிளைச் செயலாளராக பணியைத் தொடங்கி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும், முதலமைச்சராகவும் முன்னேறியுள்ள பழனிச்சாமி தான் அரசியல் திறன் மிக்கவர். இருவரையும் ஒப்பிடுவதற்கு எவ்வளவோ நாகரிகமான வார்த்தைகள் இருக்கும் நிலையில் ஆ.இராசா பயன்படுத்தியுள்ள வார்த்தைகள் அவரது தரத்தையும், அவர் கொள்கை பரப்பு செயலாளராக பணியாற்றிய தி.மு.க.வின் தரத்தையும் அம்பலப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன.

தமிழ்நாடு பெண்களை கடவுளாக மதிக்கும் பூமியாகும். கற்புக்கரசி கண்ணகியும், ஆண்டாளும் இந்த பூமியில் வாழ்ந்தார்கள். அவர்களை இந்த பூமி இன்னும் கடவுளாக வணங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், தொடக்கத்திலிருந்தே திமுகவுக்கு பெண்களை மதிப்பது என்றால் என்னவென்றே தெரியாது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சி வரிசையிலிருந்த திமுகவினரைப் பார்த்து, ''திராவிட நாடு எங்கிருக்கிறது?'' என்று மூத்த உறுப்பினர் அனந்தநாயகி எழுப்பிய வினாவுக்கு கலைஞர் கருணாநிதி அளித்த பதிலாக இருந்தாலும், இராஜாத்தி அம்மையார் யார்? என்பது குறித்து கலைஞர் கருணாநிதி அளித்த விளக்கமாக இருந்தாலும், 29.10.1977 அன்று மதுரை வந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி, அதில் ஏற்பட்ட காயத்தால் இந்திரா அம்மையாரின் புடவையில் ஏற்பட்ட இரத்தக் கறைக்கு, பெண்மையை இழிவுபடுத்தும் வகையிலான அருவருக்கத்தக்க விளக்கத்தை திமுக தலைமை அளித்ததாக இருந்தாலும் 1989-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவை திமுகவினர் மானபங்கப் படுத்தி தாக்கியதாக இருந்தாலும் பெண்களை மதிக்க திமுக தயாராக இல்லை என்பதையே காட்டுகிறது.

தமிழ்நாட்டின் தேர்தல் களத்தில் பேசப்பட வேண்டியவை பிரச்சினைகள் தானே தவிர, பிறப்புகள் குறித்த அவதூறுகள் அல்ல. முதலமைச்சரைப் பற்றி பேசுவதற்கு எதுவும் இல்லாததால் தான் திமுக இத்தகைய அருவருக்கத்தக்க, ஆபாசமான, இழிவான பரப்புரையை முன்னெடுத்திருப்பதாக தோன்றுகிறது. தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் தான் திமுகவினரை இத்தகைய இழிவான தனிநபர் தாக்குதல்களில் ஈடுபட வைக்கிறது. இது அரசியல் நாகரிகமல்ல. யாரெல்லாம் அருவருக்கத்தக்கவர்களோ, இழிவானவர்களோ அவர்கள் தான் இத்தகைய அணுகுமுறையை கடைபிடிப்பார்கள். திமுக இத்தகைய அணுகுமுறையை மாற்றிக் கொண்டு கொள்கை பேச வேண்டும்.




அரசியலில் இத்தகைய அணுகுமுறையை பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் ஆதரித்தது கிடையாது. நடிகை குஷ்பு திமுகவில் இருந்த போது அவரையும், கலைஞரையும் தொடர்புபடுத்தி ''இன்னொரு மணியம்மை'' என்ற தலைப்பில் புலனாய்வு வார இதழ் செய்திக் கட்டுரை வெளியிட்ட போது, அதைக் கடுமையாக கண்டித்த ஒரே அரசியல் தலைவர் நான் தான். 2016 தேர்தலில் போது கலைஞர் அவர்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ''உலகின் ஆதித் தொழில்'' என்று கூறி அருவருக்கத்தக்க வகையில் விமர்சித்த போதும் அதை முதன்முதலில் கண்டித்தது நான் தான். அந்த வகையில் முதலமைச்சரை இழிவுபடுத்தும் வகையிலான இராசாவின் அருவருக்கத்தக்க வார்த்தைகளை கடுமையாக கண்டிக்கிறேன்.

பெண்மையை போற்றுபவர்கள் என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்ளும் திமுக கூட்டணி கட்சிகளும், பிற கட்சிகளும் இதை கண்டிக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது அவர்களின் அரசியல் நேர்மை குறித்த ஐயங்களை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டின் தேர்தல் களத்தில் நடைபெறும் அனைத்தையும் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். வரும் ஏப்ரல் 6&ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் அவர்கள் சரியான தீர்ப்பை வழங்குவார்கள் என்று நம்புகிறேன்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News