'இவர் என்ன செய்வார்? எப்படி செய்வார் என யாருக்கும் தெரியாது' - ஏக்நாத் ஷிண்டே சட்டசபையில் யாரை புகழ்ந்தார் தெரியுமா?
மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைந்தது எப்படி என்ற ரகசியத்தை உடைத்தார் ஏக்நாத் ஷிண்டே.

By : Mohan Raj
மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைந்தது எப்படி என்ற ரகசியத்தை உடைத்தார் ஏக்நாத் ஷிண்டே.
சிவசேனாவுக்கு எதிராக அதிருப்தி எம்.எல்.ஏ'க்கள் போர்க்கொடி தூக்கியதால் அந்த கட்சியில் பிளவு ஏற்பட்டது, இதனால் நடந்த அரசியல் திருப்பங்களால் முதல்வர் பதவியில் இருந்த ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்ரே, அதனை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே புதிய முதல்வராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற கையோடு திறந்த புத்தகம் போல திரைக்குப் பின்னால் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே படம் போட்டு சட்டசபையில் விளக்கினார்.
அப்போது அவர் சட்டசபையில் கூறியதாவது, 'இருபதாம் தேதி எம்.எல்.சி தேர்தலில் கட்சியால் எனக்கு கிடைத்த அவமரியாதை எனக்கு கட்சிக்கு எதிராக தூண்டியது, இனி கட்சி பக்கம் திரும்பக் கூடாது என தீர்மானித்தேன். எம்.எல்.ஏ'க்களுடன் போலீஸ் சோதனை சாவடிகளை தாண்டி எப்படி செல்வது என எனக்கு தெரியும், செல்போன் டவரை கண்டறிவது மற்றும் ஒரு நபரை கண்காணிப்பது எப்படி என்று எனக்கு தெரியும்.
எல்லாவற்றிற்கும் மேலாக மிகப்பெரிய தூண்டுகோல் இவர்தான் என பக்கத்தில் அமர்ந்திருந்த பட்னாவிசை சுட்டிக் காட்டினார்.
கௌகாத்தி ஓட்டலில் எனது ஆதரவு எம்.எல்.ஏ'க்கள் தூங்கிய பிறகு நான் குஜராத் செல்வேன், அங்கு பட்னாவிசை சந்தித்து பேசுவேன். எம்.எல்.ஏ'க்கள் எழுந்திருக்கும் முன்பே அதிகாலையில் கௌகாத்தி ஓட்டலுக்கு திரும்பி விடுவேன் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்தவர் எங்கே இருக்கிறார், இவர் என்ன செய்வார்? எப்படி செய்வார் என யாருக்கும் தெரியாது பேசினார்.
பின்னர் தொடர்ந்த அவர், பிரதமர் நரேந்திர மோடி எங்களுக்கு வாழ்த்து கூறினார், மேலும் தன்னால் முடிந்த அனைத்து உதவிகளும் செய்வதாக என்னிடம் தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பின்னால் பாறை போன்று நின்று ஆதரவளிப்பதாக கூறினார்' என்றார் ஏக்நாத் ஷிண்டே.
