அமைச்சர் காமராஜ் நலம்பெற வேண்டி.. அ.தி.மு.க. ஐடிவிங் சார்பில் 100 பேர் பங்குபெற்ற இரத்ததானம் முகாம்.!
அமைச்சர் காமராஜ் நலம்பெற வேண்டி.. அ.தி.மு.க. ஐடிவிங் சார்பில் 100 பேர் பங்குபெற்ற இரத்ததானம் முகாம்.!
By : Kathir Webdesk
திருவாரூர் மாவட்டத்தில் அமைச்சர் இரா.காமராஜ் உடல் நலம்பெற வேண்டி அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் 100 பேர் கலந்து கொண்ட இரத்ததானம் முகாம் நடைபெற்றது.
திருவாரூர் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், தமிழக உணவுத்துறை அமைச்சருமான இரா.காமராஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அமைச்சர் காமராஜ் விரைவில் உடல்நலம்பெற வேண்டி அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் கலந்து கொண்டு கோயிலில் சிறப்பு வழிபாடு, மற்றும் முடிகாணிக்கை உள்ளிட்ட பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அ.தி.மு.க.வின் திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. திருவாரூர் கஸ்தூரிபா காந்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமிற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் சின்னராஜ் தலைமை வகித்தும் இரத்தம் வழங்கியும் முகாமினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருவாரூர் நகரச் செயலாளர் மூர்த்தி, திருவாரூர் ஒன்றியச் செயலாளர் மணிகண்டன், தகவல் தொழில் நுட்பப் பிரிவு மண்டலத் தலைவர் ராஜராஜசோழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், இரத்ததான முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ஊட்டச்சத்துப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள் இரத்தம் தானம் செய்தனர்.
இரத்ததான முகாம் செய்த அனைவரையும் பொதுமக்கள் உட்பட பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.