"பள்ளி கல்வித்துறையா இல்லை தி.மு.க'விற்கு ஆள் பிடித்து தரும் துறையா?" - தி.மு.க அரசிடம் அண்ணாமலை கேள்வி
'தி.மு.க கூட்டத்துக்கு ஆள் பிடிப்பது தான் பள்ளிக்கல்வித்துறை வேலையா?' என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
By : Mohan Raj
'தி.மு.க கூட்டத்துக்கு ஆள் பிடிப்பது தான் பள்ளிக்கல்வித்துறை வேலையா?' என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
நேற்றைய தினம் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க 3 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் கோவை வந்தார் அங்கு அவருக்கு தி.மு.க சார்பில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த வரவேற்புக்காக மக்களை அழைத்து வர பள்ளி வாகனங்களை கொடுக்க முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அம்பலப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், 'கோவையிலும், ஈரோடு மாவட்டத்திலும் அரசு விழாவில் பங்கேற்க மக்களை அழைத்து வர அனைத்து பள்ளி வாகனங்களை கொடுக்குமாறு மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர்கள் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக அறிகிறேன்.
மாற்று வாகனங்களில் மாணவர்கள் பயணிக்கும்போது அசம்பாவிகள் நடந்தால் அதற்கு இந்த அரசு பொறுப்பேற்குமா? தி.மு.க'வின் கூட்டங்களுக்கு ஆள் பிடிப்பு செய்வதுதான் பள்ளி கல்லூரி துறை முதன்மை பணியா? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.