நல்லவர்கள் அரசியலுக்கு வருவது நல்லது - ரஜினி அரசியல் வருகை பற்றி பொன்.ராதாகிருஷ்ணன்.!
#ponnar #rajini
By : Mohan Raj
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது என பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நாகர்கோவிலில் உள்ள அவரது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, "பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. நாட்டில் 85 சதவீதம் பேர் சிறு, குறு விவசாயிகள் ஆவர்.
அவர்களில் 69 சதவீதம் பேர் குறு விவசாயிகள் ஆவர். விவசாயிகள் தான் நட்டின் முதுகெலும்பு. தற்போது கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது" என்று பேசினார்.
மேலும் தொடர்ந்த அவர், "வேளாண் சட்டங்களை திசை திருப்பி அதில் அரசியல் ஆதாயம் தேட பல கட்சிகள் முயற்சித்து வருகிறது. வேளாண் சட்டங்களை ஆழமாக தெரிந்து கொண்ட விவசாயிகள் அதை ஆதரிக்கிறார்கள். விவசாயிகள் தங்களது பயிர்களை கண்டிப்பாக காப்பீடு செய்து கொள்ள வேண்டும்" என்றார்.
மேலும் ரஜினிகாந்த் அரசியல் வருகையை பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், "ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது சந்தோஷம். அவருக்கு வாழ்த்துகள். ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்கு பின்னணியில் பா.ஜனதா இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள். ஆனால் நாங்கள் எப்போதும் பின்னணியில் இருக்க மாட்டோம். முன்னணியில் தான் இருப்போம். நல்லவர்கள் அரசியலுக்கு வருவது நாட்டுக்கு நல்லது தான்" என்று கூறினார்.