கே.என்.நேருவை வரவேற்க ஆடம்பரம் - தி.மு.க கொடி கம்பம் சாய்ந்ததில் மூக்கு உடைந்த மாணவி !

சேலத்தில் தி.மு.க அமைச்சர் கே.என்.நேருவை வரவேற்க தி.மு.க கொடி கம்பங்கள் நட்டதில் ஒரு கொடி கம்பம் சாய்ந்து 10 வயது மாணவி மீது விழுந்ததில் மூக்கு உடைபட்டு விபத்து ஏற்பட்டது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் 11ஆம் தேதி அரசு நிகழ்ச்சிக்காக சேலம் வருவதை முன்னிட்டு மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் தி.மு.க முதன்மை செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்பொழுது அவரை வரவேற்க பலத்த ஏற்பாடுகள் சேலம் பகுதி தி.மு.க'வினரால் செய்யப்பட்டது.
அப்போது தாதகாப்பட்டி பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருடைய மனைவி விஜயா தன்னுடைய குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போது தி.மு.க'வினரால் நடப்பட்டு வந்த கொடிக்கம்பம் மோதி மாணவியின் மூக்கு தண்டு உடைந்தது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவியின் உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரிடம் சிகிச்சை செலவு, பாதிப்பு உள்ளிட்டவைகளுக்கு பண பேரம் பேசியதாக தெரியவந்துள்ளது. வரவேற்பு பதாகைகள் வைக்க கூடாது என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டது தி.மு.க'வினரால் காற்றில் பறக்கவிடப்பட்டு அதன் காரணமாக மாணவியின் மூக்கு உடைந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.