வேல் யாத்திரையால் தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ச்சியடைந்துள்ளது.. அமைச்சர் கடம்பூர் ராஜூ.!
தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்திய பின்னர் பாஜக அமோக வளர்ச்சி பெற்றுள்ளது மட்டுமின்றி மக்களின் கவனத்தையும் பெற்றுள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளார்.
By : Thangavelu
தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்திய பின்னர் பாஜக அமோக வளர்ச்சி பெற்றுள்ளது மட்டுமின்றி மக்களின் கவனத்தையும் பெற்றுள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் தற்போதைய அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார். இதனையொட்டி கோவில்பட்டியில் உள்ள பாஜக மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பன பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருமான கடம்பூர் ராஜூ கலந்துக்கொண்டார்.
இதனிடையே அமைச்சர் பேசியதாவது: நாட்டில் மாற்றத்தை தருவதற்கு பிரதமர் மோடியை தவிர வேறு யாருமில்லை. மக்கள் விரும்புகின்ற ஆட்சியை கொடுத்த காரணத்தால் தான் மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது. மேலும், திமுக ஒரு விஷ விதையை தமிழகத்தில் விதைத்துள்ளது. அதனை களையெடுத்து போடும் நேரம் இது. அதே நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தமிழகத்தில் பாஜக வேரூன்றி உள்ளதை கண்கூடாக பார்க்கிறோம்.
மேலும், வேல் யாத்திரை மூலமாக தமிழகத்தில் பாஜக வலுவாக வளர்ந்துள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்லாட்சி தந்துள்ளார் என்று பிரதமர் மோடி நற்சான்றிதழ் வழங்கியுள்ளார். இவ்வாறு அமைச்சர் பேசினார்.