கள்ளச்சாராய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கலெக்டரை நிர்பந்தித்தது யார்? விவாத மேடையில் கேள்விகளை முன்வைத்த எஸ்.ஜி.சூர்யா!
![கள்ளச்சாராய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கலெக்டரை நிர்பந்தித்தது யார்? விவாத மேடையில் கேள்விகளை முன்வைத்த எஸ்.ஜி.சூர்யா! கள்ளச்சாராய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கலெக்டரை நிர்பந்தித்தது யார்? விவாத மேடையில் கேள்விகளை முன்வைத்த எஸ்.ஜி.சூர்யா!](https://kathir.news/h-upload/2024/06/22/1632874-adobeexpress2023121711145601.webp)
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் மரணங்கள் குறித்த விவகாரங்கள் கடந்த மூன்று நாட்களாக தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் இந்த விவகாரத்தில் ஆளும் கட்சியின் அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இது குறித்த தலைப்புகளில் பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்றைய தினம் தனியார் பத்திரிக்கை தொலைக்காட்சியில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் ஏன்? இதற்கு காரணமான அரசியல்வாதிகள், அதிகாரிகள் யார்? இத்துயரம் மீண்டும் நடக்காமல் இருக்க தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்? என்ற தலைப்பில் நடைபெற்று விவாதத்தில் கலந்து கொண்ட பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, "பொதுவாக இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் பொழுது ஏன் நடந்தது, எப்படி நடந்தது, எப்படி கட்டுப்படுத்த இருக்கலாம், எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது.
ஆகஸ்ட் 12, 2022 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், போதை ஒழிப்பு போன்ற சம்பவங்களை குறிப்பிட்டு நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என பேசி இருந்தார். ஆனால் கடந்த வருடம் 22 மரணங்கள் கள்ளச்சாரத்தால் 13 ஆண்டுகள் கழித்து நடைபெற்றது. அதிலும் கடைசியாக 2009 திமுக ஆட்சியில் தான் கள்ளச்சாராய மரணங்கள் நடந்தது. அதற்குப் பிறகு மீண்டும் திமுக ஆட்சியில் கடந்த வருடம் இதுபோன்ற சம்பவம் நடந்த பொழுது, முதல்வர் அவர்கள் இது இனிமேல் தொடராது ஒரு மரணங்கள் கூட நடக்காது. நான் இரும்பு கரம் கொண்டு அடக்குவேன் என்று கூறினார். மேலும் இதற்காக பிரத்தியேகமாக அவசர அழைப்பு எங்களையும் அறிவித்தனர்.
ஆனால் கடந்த வருடத்தில் நடந்த சம்பவமும், இந்த ஜூன் மாதத்தில் நடந்த சம்பவத்தையும் பார்க்கும் பொழுது 13 மாதங்களில் இந்த அரசு நிர்வாகம் எப்படி செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதை காட்டுகிறது. திடீரென இந்த சம்பவம் நடந்ததாக மக்கள் அனைவரும் பார்க்கிறார்கள். ஆனால் கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் நடந்த ஒரு சம்பவத்திற்கு நடவடிக்கை மற்றும் விசாரணை எடுக்க அப்பொழுது அம்மாவட்ட எஸ்.பி ஆக இருந்தவரை மாற்றி மோகன்ராஜ் என்பவரை இதே முதலமைச்சர்தான் நியமித்தார். அந்த அதிகாரி மிக நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்றவர். அவரே கள்ளக்குறிச்சியில் நடக்கின்ற கள்ளச்சாராயம் விற்பனை குறித்து விசாரணைகளை தொடங்கியுள்ளார். மேலும் ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய இரண்டு பகுதிகளில் அதிகமாக கள்ளச்சாராயம் காய்ச்சிகிறார்கள் என்பதை தெரிந்த மோகன்ராஜ், இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அப்பகுதியில் இருந்த திமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள், பிரமுகர்கள் அதிக அழுத்தம் கொடுத்து மோகன் ராஜை இதில் நடவடிக்கை எடுக்க விடாமல் செய்துவிட்டனர்.
இருப்பினும் இது தொடர்பாக மேல் இடத்திற்கு தெரியப்படுத்தினால் கள்ளச்சாராயத்தை தடுத்து விடலாம் என்ற நடவடிக்கையிலும் அவர் ஈடுபட்டுள்ளார். ஆனாலும் மோகன் ராஜால் இந்த விவகாரத்தை மேலிடத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் மோகன்ராஜ் விருப்ப ஓய்வு எடுத்துவிட்டு சென்று விடுகிறார். அன்று அவர் எவ்வளவோ அரசாங்கத்திற்கு இது குறித்த எடுத்து சொல்ல முற்பட்டும் அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை. ஆகவே நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஒரு எஸ்.பி இந்த மாதிரியான நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்பதை தெரிந்து கொள்ளாமல் இருந்தாரா அல்லது இதனைத் தெரிந்து கொள்ளாத அளவிற்கு முதல்வர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது!
மேலும், இன்று நக்கீரன் இதழில் வெளிவந்த செய்தியில், கள்ளச்சாராயம் குடித்து அவர்கள் இறக்கவில்லை என்ற செய்தியை அப்பகுதி கலெக்டராக இருந்த ஷ்ரவன்குமார் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறுகிறார். அதை நம்பி பல பேர் குடித்து அதில் இறப்புகள் ஏற்பட்டு இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கள்ளச்சாராயம் குடித்து இறக்கவில்லை என கலெக்டர் ஒருவரை கூறச் சொல்லி தூண்டியது யார்? தற்போது அவரை சஸ்பெண்ட் செய்துவிட்டு இடமாற்றிவிட்டார்கள். யார் இதை கூற சொன்னார்கள் என்பதை அவர் கூறுவாரா என்பது தெரியவில்லை. ஆனால் இந்த இதழில் சட்டசபை கூட உள்ளது, இந்த விவகாரம் பெரும் அரசியல் பிரச்சினையாக மாறிவிடும். அதனால் அப்பகுதியில் உள்ள மாவட்ட அமைச்சர்கள், நிர்வாகிகள் நிர்பந்தித்து கலெக்டரை இப்படி கூறச் சொல்லியதாக அந்த இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது" என்று அந்த விவாதத்தில் கடுமையாக தனது வாதங்களை முன்வைத்து பேசியுள்ளார்.