Kathir News
Begin typing your search above and press return to search.

அரசு அதிகாரிகளையும்,காவல் துறை அதிகாரிகளையும் மிரட்டி வரும் திமுக முக்கிய புள்ளிகள் : அண்ணாமலை குற்றச்சாட்டு சொல்வது என்ன?

அரசு அதிகாரிகளையும்,காவல் துறை அதிகாரிகளையும் மிரட்டி வரும் திமுக முக்கிய புள்ளிகள் : அண்ணாமலை குற்றச்சாட்டு சொல்வது என்ன?

SushmithaBy : Sushmitha

  |  23 Jun 2024 11:48 AM GMT

தமிழக மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உலுக்கிய சம்பவம் கள்ளச்சாராய உயிரிழப்புகள். இதில் இதுவரை 56 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் கள்ளக்குறிச்சிக்கு சென்று உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு செல்லவே இல்லை. மேலும், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதற்கு ஆளும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களே உறுதுணையாக இருந்துள்ள தகவல்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.

அந்த வகையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனையானது அதிகரித்து வருவதை தெரிந்து, அது குறித்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என முன்பு அப்பகுதியில் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் மேல் இடத்தில் கூறமுற்பட்டும், கள்ளச்சாராயத்தை தடுக்கும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டும் அரசின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்பதால் விருப்பு ஓய்வு பெற்றுள்ளார் என்ற அதிர்ச்சிகர தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.

இதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அண்ணாமலை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் திரு. மோகன்ராஜ் அவர்கள். அவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் பொறுப்பேற்றதிலிருந்தே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்துவதில் உறுதியாக இருந்தார். அவரது பதவிக் காலத்தில், பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டனர். ஒரே நாளில் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணி செய்து வந்த 25 காவலர்களை இடமாற்றம் செய்தார்.

கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் இத்தனை தீவிரமாக இருந்த திரு. மோகன்ராஜ் அவர்கள், பணி ஓய்வுக்கு எட்டு மாதங்கள் இருக்கும்போதே, விருப்ப ஓய்வு கேட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார். அரசியல் அழுத்தம் காரணமாகத்தான் அவர் விருப்ப ஓய்வில் செல்கிறார் என்ற குற்றச்சாட்டு அப்போதே எழுந்தது. ஆனால், அதற்கு காவல்துறை சார்பில் மழுப்பலான ஒரு மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. திரு.மோகன்ராஜ் அரசியல் அழுத்தம் காரணமாகத்தான் விருப்ப ஓய்வு பெற்றார் என்பதை தற்போதைய கள்ளச்சாராய மரணங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இன்றைய தினமலர் நாளிதழில், திரு. மோகன்ராஜ் அவர்கள், ஓய்வு பெற எட்டு மாதங்கள் இருக்கும்போதே விருப்ப ஓய்வில் சென்றதற்குக் காரணம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச்சாராய மரணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்தும், அவரை நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அந்தப் பகுதி திமுக முக்கியப் புள்ளிகள் மிரட்டியுள்ளதாகவும், காவல்துறை தலைமையும் இதனைக் கண்டுகொள்ளவில்லை என்பதால், வேறு வழியின்றி விருப்ப ஓய்வில் சென்றார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


உண்மையிலேயே முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு, பொதுமக்கள் மீது அக்கறை இருக்குமேயானால், கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை எண்ணி உண்மையான வருத்தம் இருக்குமேயானால், கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் திரு. மோகன்ராஜ் அவர்களை மிரட்டிய திமுக முக்கியப் புள்ளிகள் யார் என்பதையும், இதனை அறிந்தும் நடவடிக்கை எடுக்காமல் கண்டுகொள்ளாமல் இருந்த காவல்துறை அதிகாரிகள் யார் என்பதையும் விசாரித்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், எல்லாம் தெரிந்திருந்தும், தன் கட்சியினரைக் காப்பாற்ற பொதுமக்களைப் பலி கொடுத்த முதலமைச்சர் என்பதாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும்.

அதற்கு முதற்படியாக, நாங்கள் ஏற்கனவே கூறியது போல, சுமார் ஐம்பது உயிர்கள் பறிபோனதற்குப் பொறுப்பேற்று, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்கான முதலமைச்சரா அல்லது திமுகவினருக்கு மட்டுமா? என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

இப்படி தொடர்ச்சியாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் கேள்விகளை திமுகவிற்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் முன்வைத்து வருகிறது. ஆனால், அண்ணாமலை முன்வைத்த கேள்வியை போன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு அல்ல, திமுகவிற்கு மட்டும் தான் முதல்வர் என்பதை நிரூபிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News