தமிழகத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: திமுக அரசின் அலட்சியம் -அண்ணாமலை!
தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் புதிய டாக்டர்கள் இல்லாததால் உயிரிழப்புகள் அதிகரிப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இயற்றிய பதிவில் கூறி இருப்பதாவது :-
நெல்லை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் டாக்டர் இல்லாத நிலையில் அங்கிருந்த உதவியாளர் ஒருவர் ஊசி போட்டதால் தென்காசியைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த நான்காண்டுகளில் தமிழக அரசு ஆஸ்பத்திரியில் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணில் அடங்காமல் அதிகரித்துள்ளன. இதில் பெரும்பாலானவை போதிய டாக்டர் இல்லாததால் ஏற்பட்டுள்ளன. நான்காண்டுகளாக மருத்துவர்களை நியமிக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர்? டாக்டர்கள் நியமனம் எதனால் தாமதம் ஆகிறது?
எத்தனை சிறு குழந்தைகளை தொடர்ந்து பறிகொடுத்து வருகிறோம். இது அதோ என்று நான்கு ஆண்டுகளில் தமிழக மருத்துவத்துறையை நாசமாக்கிவிட்டு கொஞ்சம் கூட மனசாட்சி இன்றி பதவியில் இருக்க கூச்சமாக இல்லையா அமைச்சருக்கு ? இத்தனை கையாலாகாதா அமைச்சரை மிக முக்கியமான சுகாதாரத் துறையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு. க ஸ்டாலினுக்கு தமிழக அரசு ஆஸ்பத்திரிகளில் ஏற்படும் தொடர் உயிரிழப்புகள் தெரியுமா தெரியாதா? நெல்லை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு திமுக கட்சியில் இருந்து உதவி செய்யப் போவதாக கூறி இருப்பது திமுக அரசின் தோல்வியை மூடி மறைக்கவா?
திமுக கொடுக்கும் பணம் குழந்தைகள் உயிருக்கு ஈடாகிவிடுமா? தமிழக அரசு ஏன் பொறுப்பேற்கவில்லை? தமிழக அரசு சார்பில் ஏன் இழப்பீடு அறிவிக்கவில்லை? இந்த கையாலாகாத திமுக அரசின் சுகாதாரத்துறை ஒழுங்காக செயல்படுவதற்கு இன்னும் எத்தனை பேர்களை பறிகொடுக்க வேண்டும்? இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.