பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில்: கல்லிடைக்குறிச்சி மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன மோடி அரசு!

தூத்துக்குடி- பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அனுமதி வழங்கியுள்ளார். இதற்கு மத்திய அமைச்சர் டாக்டர் எல். முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது சமூக ஊடக எக்ஸ் தள பக்கத்தில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் பதிவிட்டிருப்பதாவது: "தூத்துக்குடி- பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலை கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நிறுத்திச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அனுமதி வழங்கிய மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தை தினமும் சுமார் 2 ஆயிரம் பயணிகள் வரை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு ஆண்டு வருமானம் சுமார் ரூ. 1.5 கோடி என்ற அளவில் இருக்கிறது. இந்த ரயில் நிலையத்தில் மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்கின்றன. இதேபோல் தூத்துக்குடி- பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலை கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நிறுத்திச் செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றிய மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு அமைச்சர் டாக்டர் எல். முருகன் நன்றியை தெரிவித்துள்ளார்