Kathir News
Begin typing your search above and press return to search.

தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை.. முதலமைச்சர் எடியூரப்பா அரசியல் செயலாளர் சந்தோஷ் விளக்கம்.!

தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை.. முதலமைச்சர் எடியூரப்பா அரசியல் செயலாளர் சந்தோஷ் விளக்கம்.!

தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை.. முதலமைச்சர் எடியூரப்பா அரசியல் செயலாளர் சந்தோஷ் விளக்கம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Dec 2020 8:10 AM GMT

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளராக என்.ஆர்.சந்தோஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் எடியூரப்பாவின் நெருங்கிய உறவினரும் ஆவார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சந்தோஷ் தனது வீட்டில் மயங்கிய நிலையில் இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி ஜான்வி தனது உறவினர்களுடன் சந்தோசை மீட்டு எம்.எஸ்.ராமய்யா மருத்துவமனையில் அனுமதித்தார்.

குடும்ப தகராறு காரணமாக அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு சந்தோஷ் தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக ஊடகம் மட்டுமின்றி தேசிய செய்தி நிறுவனங்களும் பெரிது படுத்தியது. மேலும் இளம் வயதிலேயே சந்தோஷ், முதலமைச்சரின் அரசியல் செயலாளர் ஆனதால், இது பிடிக்காத பாஜகவினர் சிலர் சந்தோசுக்கு நெருக்கடி கொடுத்ததாகவும், அவரை ராஜினாமா செய்ய சொல்லி தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதனால் தான் சந்தோஷ் தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டது.

இந்நிலையில் தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக சதாசிவநகர் போலீசார் சந்தோஷ் மீது வழக்கும் பதிவு செய்து உள்ளனர். இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தோசுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் சந்தோஷ் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது.


இதனை தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் இருந்து பொது வார்டுக்கு நேற்று முன்தினம் சந்தோஷ் மாற்றப்பட்டார். அவர் நேற்று முன்தினம் இரவே டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் அவர் டிஸ்சார்ஜ் ஆகவில்லை.


இந்நிலையில் பூரண குணமடைந்ததை அடுத்து நேற்று காலை 10.30 மணியளவில் மருத்துவமனையில் இருந்து சந்தோஷ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது மருத்துவமனை வாசலில் வைத்து சந்தோஷ் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் தற்கொலைக்கு முயன்றது எதற்காக என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சந்தோஷ் கூறியதாவது:

நான் மனரீதியாக வலிமை உடையவன். நான் தற்கொலைக்கு முயன்றதாக தவறான தகவல்கள் வெளியாகி உள்ளன. சம்பவத்தன்று மதியம் எனது உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தேன். அங்கு உணவும் சாப்பிட்டேன். அந்த உணவு எனக்கு ஜீரணம் ஆகவில்லை. இதனால் இரவு தூக்கம் வராமல் தவித்து வந்தேன். இதன் காரணமாக தூக்கம் வர தூக்க மாத்திரைகளை சாப்பிட்டேன்.

வழக்கமாக இரவு நேரத்தில் தூக்க மாத்திரை சாப்பிட்டு நான் தூங்குவது வழக்கம் தான். ஆனால் அன்றைய நாள் அளவு தெரியாமல் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு விட்டேன். இதனால் மயக்கம் போட்டு விழுந்தேன். என்னை எனது மனைவி ஜான்வி மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். எனக்கும், எனது மனைவிக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. மேலும் அரசியல் காரணங்களுக்காக நான் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவும் தவறான தகவல். என்னை யாரும் ராஜினாமா செய்ய கூறி தொல்லை கொடுக்கவில்லை. நான் எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும்?

ஏதோ வீடியோ விவகாரத்தில் தான் நான் தற்கொலைக்கு முயன்றதாக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். அவர் என் மீது இப்படி குறைகூறுவது இது முதல் முறை கிடையாது. அவருடைய வீட்டில் விசாரணை அமைப்புகள் சோதனை நடத்திய போதெல்லாம் அவர் இப்படி தான் வீடியோ உள்ளது என்று கூறி வந்தார். அவர் கூறுவது போன்று எந்த ஒரு வீடியோவும் அவரிடம் இல்லை. அவர் எதற்கு எடுத்தாலும் முதலமைச்சர் எடியூரப்பாவை குறை கூறி வருகிறார். தயவு செய்து முதலமைச்சர் எடியூரப்பாவை பற்றி பேச வேண்டாம் என்று அவரை கேட்டு கொள்கிறேன்.


மேலும், இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததில் இருந்து டி.கே.சிவக்குமாருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு விட்டது. மின்னணு இயந்திரம் மீதும் குறை கூறுகிறார். அவர் ஒரு மாதம் மனநல மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வரலாம். நான் 12 தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாக சொல்லவது தவறு.. யார் இப்படி தவறான தகவலை பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News